Sunday 28 December 2014

காக்கா...பாவம்

நீர்நிலைகளில் இருக்க வேண்டியா காகங்கள்...பாவம் வாட்டர் டேங்க் ம் நீர் நிலைனு நினைச்சிகிச்சி போல






வானம்

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வானம்.......

மார்கழி பனி மழையில் நனையும் சூரியன்






”நான் ஈ” இல்லை.

கொல்லைப்பக்கம் உலாவிய ஈ...


                     



                          

என்னா ஒரு வில்லத்தனம்???

இந்த நாயைப் பாத்திங்களா? முதல் படத்தில் நாய் வாளியை தன் காதால் தட்டி விடுகிறது. இரண்டாவது படத்தில் பாத்திரத்தில் உள்ள உணவுப் பொருளை அழகாக சாப்பிடுகிறது. ( நாய் சாப்பிட வந்தால் விரட்டாமல் சாப்பிடுவதை போட்டா புடிச்சியாடினு அம்மா திட்டியது ஆஃப் த ரெக்கார்ட்)










நம்பிக்கை

சிமெண்ட் தரையில் , தண்ணி இல்லாத இடத்தில், எப்படி தன் வாழ்வைத்துவக்குகிறது இந்தப் புல்..

கற்றுக் கொடுக்கிறது இயற்கை...எங்கும் நமக்கான தகவமைப்பை பெற்றுக் கொள்ள.







Saturday 13 December 2014

கால் முளைத்த கேரட்

சில சமயம் வீட்டுல் பொருட்களை அங்கங்கே போட்டுருவோம். அப்பல்லாம் அம்மா இது எப்படி இங்க வந்ததுன்னு கேப்பாங்க. அது ஏற்கனவே வந்ததுன்னோ அது பற்றி தெரியாதுன்னும் சொல்லி சமாளிப்போம்
உடனே அம்மா ஆமா அதுக்கு கை முளைச்சு கால் முளைச்சு வந்துச்சாடினு திட்டிட்டே எடுத்து வைப்பாங்க.
இப்ப பாருங்க நிஜமாவே கேரட்டுக்கு கால் முளைச்சுருக்கு....
இதனால் நான் அம்மாவுக்கு சொல்ல விரும்புவது...பொருட்களுக்கு கை கால் கல் முளைக்கும். எனவே வீடு கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால் அதற்கு நாங்கள்...குறிப்பாக நான் பொறுப்பில்லை...ஒ.கே..
நீங்க கூட இப்படி ஏதும் புதிதாய் சிந்திக்க முயலலாம்.
(அம்மா வாங்கி வந்த காய்கள் மூலமா...அம்மாவுக்கே ஆப்பு....ஹா....ஹா.....)






Friday 12 December 2014

பள்ளி முதல்வர்.2

அன்று பாதி தான் தட்டச்சு செய்ய முடிந்தது. மீதி இதோ
**************************************************************

அம்மா தலைமைஆசிரியர் என்பதால் அம்மாவின் தோழமைகைள் பெரும்பாலனவர்கள் தலைமை ஆசிரியர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் தனது உதவி ஆசிரியர்கள் பற்றிய ஒரு நீண்ட குற்றப்பட்டியல்களை வாசித்துக் கொண்டே இருக்கக் கேட்டிருக்கிறேன். மேலும் தனது கீழ்பணிபுரியும் ஆசிரியர்களைத் தட்டிக் கேட்க இயலாதவர்களாகவும், எதிர்க்கத் துணியாதவர்களாகவும் அதே சமயம் அவர்களோடு இணங்கிப்போகத் தெரியாதவர்களாகவும் இருப்பதை நான் அறிவேன். ஆனால் எங்கள் பள்ளி முதல்வரிடம் அந்தப் பேச்சுக்கே இடமில்லை.

எனக்கே ஒரு ஆச்சரியம் உண்டு. ஒரே நபர் எப்படி நெகிழ்வானவராகவும் கண்டிப்பு மிகுந்தவராகவும் இருக்க முடியும்? சூழலுக்கு தகுந்தார்போல் இயங்கும், அல்லது இயக்க வைக்கும் சூட்சுமத்தை அவர் யாரிடம் கற்றிருப்பார்?

எல்லாப் பிறந்தநாளிலும் அவர் தன் வலது கரத்தை என் தலையில் வைத்து காட் பிளஸ் யூ மை சைல்ட் என்று சொல்லி இனிப்புகள் எடுத்துக் கொண்டு ஒரு வாழ்த்து அட்டையில் கையெழுத்திட்டுத் தருவார். அவரிடம் அப்படி ஒரு வாழ்த்து பெறவே வருடத்திற்கு இரண்டு பிறந்த நாள்கள் வரக் கூடாதா என்ற எண்ணம் ஏற்படும் . அவரின் வாழ்த்து அவர் இதயத்திலிருந்து கிளம்பி நமது ஆன்மாவை நிறைக்கும். உண்மையான அன்பும் நேசமும் இருப்பவர்களால் தான் அப்படி ஒரு வாழ்த்து தர முடியும்

சென்ற பிறந்த நாள் அன்று அந்தப் பள்ளியில் நான் இல்லாத காரணத்தால் அவரின் வாழ்த்து கிடைக்காமல் போனது குறித்து இப்போதும் வருத்தமாகத்தான் இருக்கிறது.

அவரிடம் நல்லபெயர் மற்றும் நன்மதிப்பு வாங்கிய மாணவிகளில் நானும் ஒருத்தி.

ஏனோ எனது இப்போதையப் பள்ளியில் சில மாணவர்களின் அடாவடித்தனங்கள், மற்றும் அதனால் ஆசிரியர்கள் அடையும் மன உளைச்சல்களைப் பார்க்கும் போதெல்லாம் அவரிடம் இது போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

எப்போதும் மாணவர்கள் ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், காதலிப்பதும், பிற மாணவிகளை துயரத்திற்குள்ளாக்கும் போதும் எனக்கு இந்த துன்பங்கள் நேரவில்லை என்பதாலேயே என்னால் அகன்று போக முடியவில்லை. மனம் பரிதவிக்கிறது. சிறுமியான என்னால் என்ன செய்ய இயலும்? அவர்களுக்கான ஒரு பிரார்த்தனை செய்வதைத்தவிர. எல்லோரும் நல்லபடி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

கட்டணம் முறையாகக் கட்டாதவர்க்ள், சமுதாயத்தில் வளம் குன்றியவர்கள், மோசமான சூழ்நிலையிலிருந்து வருபவர்கள், மிக மோசமாக நடந்து கொள்ளக் கூடியவர்கள்,  என்று அங்கு இருந்த மாணவர்களில் பலவகை இருந்தார்கள் தான். ஆனால் எல்லோரையும் கவரக்கூடியதாகவும் அனுசரித்துப் போகக் கூடியதாகவும், ஆற்றுப் படுத்தக் கூடியதாகவும் இருந்தது அவரின் செயல்பாடுகள்.

 மிக உயர்ந்த நிலைக்கு வந்தபின் இந்த வலைதளம் பற்றியும் அவரைப்பற்றிய இந்த எனது எண்ணங்கள் பற்றியும் அவரோடு பகிர்ந்து கொள்வேன். ஒரு நல்ல மாணவி தன் செயல்களால் தான் தன்னை நிரூபிக்க வேண்டுமே தவிர  சொற்களால் அல்ல என்பதை உணர்கிறேன்.



இந்த வலை தளம் பற்றி அவருக்குத் தெரியாது. அவரைப் பற்றி எழுதப் போகிறேன் என்பதும் அவருக்குத் தெரியாது. ஆனால் இனிவரும் நாளில் நான் சமுதாயத்தில் மிக உயர்ந்த பதவியை அடையலாம். அப்படி நான் எதிலேனும் ஒரு நிலையில் உச்சத்தை அடைந்தவள் ஆவேன் என்பதுதான் அவருக்கு நான் தரும் பரிசு....காணிக்கை.








                                                                

( இன்னும் நிறைய சொல்லலாம் தான்...ஆனால்.. நேரம்) 

Tuesday 9 December 2014

பள்ளி முதல்வர்

                                           

நான் எனது பழைய பள்ளியை இன்னும் நேசிக்கிறேன். ஏனெனில் அதற்கு காரணம் எனது பள்ளி முதல்வர்.

நான் எட்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு எழுதி முடித்த போது என்னை அழ வைக்கும் ஒரு தகவல் வந்தது. எனது பள்ளி முதல்வர்  மஞ்சள் காமாலையின் காரணமாக இறந்து விட்டார்.

ஒரு புறம் பயம்...அச்சம்....ஏமாற்றம்.....வருத்தம் எல்லாம் கலந்த கலவையான உணர்வுக்குள் நான் தள்ளப்பட்டேன்.

ஏனெனில் அவர் ஒரு அன்புபெட்டகம்.மாணவர்களைக் கையாள்வதில் நிபுணர். ஆனால் எப்படியும் ஒரு புதிய முதல்வர் எங்களுக்கு வருவார். அவர் இவர் போல இருப்பார் என்று சொல்ல முடியாது.

எனவே புதியவர் குறித்த என் பயம் அதிகமானது. ஓரிரு நாளில் புதிய முதல்வர் வரப் போகிறார் என்றும் அவர் எப்போதும் குச்சியும் (பிரம்பு) கையுமாகத்தான் அலைவார் என்றும் தேவைக்கு அடிப்பதைத் தவிர தேவையில்லாமலும் அடிக்கடி அடிப்பார் என்றும் அனைத்து ஆசிரியர்களும் பயம் காட்ட ஆரம்பித்தனர். சும்மாவே நடுங்கிக் கொண்டிருந்த என் போன்றவர்களுக்கு மேலும் உதறல் எடுத்தது.

எனது தோழிகளும் விடாமல் புதிய முதல்வர் அப்படியாம், இப்படியாம் என்று தாங்கள் கேட்ட கதைகளையும் சில சமயம் கேட்காமல் தாங்களே உருவாக்கிய கதைகளையும் கூறிக் கொண்டே இருந்தனர்.

நான் பயந்து கொண்டே தான் ஒன்பதாம் வகுப்பிற்குள் நுழைந்தேன்.

முதல் நாள் அவரைப் பார்த்தபோது கொஞ்சம் மிடுக்கு, கம்பீரம் என்று தமிழில் ஏதேதோ சொல்வார்களே அப்படித்தான் தோன்றினார். ஆனாலும் பயமும் இருந்தது.

ஆனால் அவர்எங்கள் வகுப்பிற்கு முதன்முதலாய் வந்த போது ஆசிரியர் சொன்னது கட்டுக் கதைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று என் மனம் சொன்னது. ஆனாலும் எங்களை அச்சுறுத்தும் பணியை ஆசிரியர்கள் விடவே இல்லை.

அவர் பெயரில் உள்ள அருளை அவர் எப்போதும் தனக்குள் வைத்திருந்தார்.

இன்றைய நாளில் எங்கேனும் மாணவர்களைக் கையாளத் தெரியாத தனக்குக் கீழ் உள்ள ஆசிரியர்க்ளைக் கையாளத் தெரியாமல் யாரேனும் இருந்தால் எனக்கு சட்டென்று அவர் ஞாபகம் தான் வரும். அந்த அளவுக்கு எங்கள் மீது அன்பும், நட்பும், நேயமும், கொண்டவர். இன்னும் நான் சிறு பிள்ளையாக இருப்பதால் அவரைப் பற்றி வர்ணிக்க எனக்குத் தெரியவில்லை என்றே எண்ணுகிறேன்.

எல்லாப் பள்ளிகளிலும்  மாணவர்கள் மாணவிகளைக் கலாய்ப்பது  தவிர்க்க இயலாத்து தான். ஆனால் அவர்களை இவர் ஆற்றுப் படுத்திய விதமும் கையாண்ட விதமும் இன்னும் நான் வேறு பள்ளியில் படிக்கிறேன் என்றாலும் மறக்க முடியவில்லை. எப்போதும் பெண் பிள்ளைகள்ஒரு சில ஆண்பிள்ளைகளால் துயரத்திற்குள் தள்ளப் படுகிறார்கள் தான். ஆனால் அவர் அதனை மிகச் சரியாக கண்டுபிடித்து தண்டிப்பார். அல்லது கண்டிப்பார். அந்தப் பள்ளியில் நான் படித்த வரை ஆண் பிள்ளைகள் இந்த அளவுக்கு தொல்லை கொடுப்பதில்லை. அது எங்கள் முதல்வரின் கண்ணுக்கு எப்படித்தான் தெரியுமோ....அவர்களைக் கூப்பிட்டு அற்புதமாக கவுன்சிலிங் செய்து அனுப்புவார். அவர் பாணியை எல்லோரும் கையாண்டால் பள்ளியில் பெண் குழந்தைகள் மனப் புழுக்கம் கொஞ்சமேனும் குறையும் என்று தோன்றுகிறது.

அவர் பற்றி ஒரு முக்கிய நிகழ்வை நான் உங்களுக்குச் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.........தேர்வு காலமாகையால் எனக்கு நானே கணிணி கொடுக்கப்பட்ட நேரம் முடிந்தது...எனவே தொடரும்...

பின் குறிப்பு....இறந்து போன பள்ளி முதல்வர். திரு ஆரோக்கியசாமி

எங்களின் இனிய பள்ளி முதல்வர். திரு  அருள் பிரான்சிஸ்

எனது பழைய பள்ளி எஸ்.எஃப்எஸ்






Tuesday 2 December 2014

டமில் .in...இங்கிலிஷ்

                                  


தலைப்பே புரிய வைத்திருக்கும் இது எதைப் பற்றிய கட்டுரை என்று

இன்றைய மாணவர்கள் தமிழ் மீது அதிக ஆர்வம் காட்டுவதில்லை.  அவர்கள்  சொல்லும் காரணம் படிப்பிற்கு அது எந்த வகையிலும் உதவாது என்பதே.

போதாக்குறைக்கு இந்த தமிழ் வாத்தி எப்படி எழுதினாலும் முழு மதிப்பெண் போட மாட்டார் என்று ஆசிரியரையே குறை சொல்கின்றனர். தமிழ் ஆசிரியர்கள் அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இவர்கள் கணக்கில்   “அது” தான்

எதிலுமே தேர்ச்சி பெறாமல், அல்லது எதற்குமே லாயக்கற்றவர்கள் தான் தமிழ் படிக்க வேண்டும் என்பதுவே இவர்களின் எண்ணமாக இருப்பது தான் வேதனையிலும் வேதனை.

சரி படிக்கத்தான் மாட்டேன் என்கின்றார்கள் என்று பார்த்தால் பேச்சும்   “ தத்தக்கா பித்தக்கா”   என்று பேசி தமிழை கொல்கின்றனர்.

உணவு இடைவேளையின் போதும் ஆங்கிலம் கலந்து தான் பேசுகிறார்கள்        ( அதையேனும் முழுமையாய் பேசினால் தேவலை. அதுவும் அரை குறைதான்)

சாதாரண தமிழ் வார்த்தைகளான........கலப்படம், கலந்துரையாடல், இந்த வார்த்தைகள் கூடத் தெரியவில்லை. ஸ்கூல் வெறிச்சோடிக் கிடக்கு என்று சொன்னேன். இந்த வாக்கியம் அவர்களுக்குப் புரியவில்லை. புலவர் மகளே என்று என்னைக் கிண்டல் செய்கிறார்கள்.

தமிழ் அதிகம் தெரிந்து வைத்திருந்தால் அது ஒரு இழுக்கு என்றும் ..அவமானம் என்றும் கருதும் இவர்களை என்ன செய்வது?

சாதாரண சொற்களைக் கூட வித்தியாசமாகக் கேட்கிறார்கள். தமிழ் ஆசிரியர் வகுப்புக்கு வந்தால் அய்யோ ய்யோ தமிழா? என்று சொல்லி பிளேடு என்றும் போர் என்றும் தலையில் கைவைத்துக் கொண்டு அமர்கின்றனர். ஒருவருக்குக் கூட அது நம் தாய்மொழி என்ற பற்றே இல்லை.

இதுவாவது பரவாயில்லை. தமிழ்த் தாய் வாழ்த்து எழுதியது பாரதியார் என்று என்னோடு வாதிடுகிறார்கள். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்றும் பாதி பாடல் தான் அவர்கள் பாடுகிறார்கள் முழுப்பாடலும் கேட்க அழகாகவும் உணர்வுப் பூர்வமாகவும் இருக்கும் என்றால் ஏதோ நான் கதை சொல்வது போல் கேட்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு தமிழ் ஒன்றுமே அவர்களுக்கு ஞாபகத்தில் இல்லை. இதெல்லாமா நடத்தினார்கள் என்ற பாவனையில் பார்க்கிறார்கள். அதோடு இதனை நான் ஞாபகம் வைத்துள்ளதால் என்னை ஒரு விநோத ஜந்து போலவே பார்க்கிறார்கள்.

பாரதியார், ஒளவையார், கம்பர் தவிர ஒருவரையும் தெரியவில்லை. சுரதா, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாரதிதாசன், கண்ணதாசன், அழ.வள்ளியப்பா, முடியரசன், காசிஆனந்தன் , என்று ஒருவரையும் தெரியவில்லை.

இதுவே தெரியவில்லை என்றால் நான் நக்கன்னை, நச்செள்ளை, காக்கைப் பாடினி என்று சொல்லியிருந்தால் என்ன தெரிந்திருக்கும்?

திரையிசைப் பாடல்கள் கேட்கிறீர்களே அதுவும் ஏதேனும் ஒரு கவிஞரால் எழுதப்பட்டுப் பின்பு இசைக்கப் படுவது தானே என்றால் ஏதோ நான் வேற்று கிரகத்தில் இருந்து வந்து இவர்களுக்குச் சொல்வது போலவே தான் பார்க்கப்படுகிறேன்.

சரிதான். ஆங்கில வழிக் கல்வி வேலை தேடுவதற்காக என்றாலும் தமிழை வீட்டில் கேட்க மாட்டார்களாஎன்றால் கல்லூரியிலும் தமிழ் ஒரு வருடம் அல்லது இரு வருடம் தான் வரும் அது மதிப்பெண்ணாக கணக்கெடுப்பது இல்லை எனவே இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் மட்டும் கவனம் வைத்துப் படித்தால் போதும் என்று வீட்டிலேயே சொல்வார்களாம் ( காசி ஆனந்தன் அய்யா சரியாகத் தான் பாடியிருக்கிறார்....இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை என்றாரே தமிழே வேண்டாம் என்போரை என்ன சொல்வார்?   )  

இன்னொன்று இவர்களுக்கு இயற்பியல் வேதியியல் என்றால் சிரிப்பு வருது.

தமிழ் மதிப்பெண் தான் அனைத்திற்கும் செல்லுபடியாகும் என்ற சட்டம் இருந்தால் தமிழ் நாட்டில் இருந்து கொண்டே பிரஞ்ச், சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு போன்ற பாடங்களை மொழிப்பாடமாக ஏன் தேர்வு செய்கிறார்கள்.?

இதனை நான் சொன்னால் அதான் அதையெல்லாம் படிக்க தமிழ்மீடியம் பிள்ளைங்க இருக்காங்களே என்று சொல்லி , சொல்லும் என்னையும் கேலி பொருளாய் தான் எண்ணுகிறார்கள்

சில நாட்களுக்கு முன் நான்ஒரு வலைபக்கத்தில்  படித்தேன்  “டிஸ்கவரி சேனல்ல  கூட தமிழ் பேசுறாங்க.  ஆனா நம்ம தமிழில் பேசுனா டிஸ்கவரி சேனல் ஆர்ட்டிஸ்ட் மாதிரி பாக்குறாங்கன்னு.”

என்னே தமிழுக்கு வந்த சோதனை????????


                        

Saturday 29 November 2014

தூய்மை இந்தியா( தூசி இந்தியா)

எங்காவது யாராவது ஒரு நிகழ்ச்சி நடத்தினால் உடனே அதை பின்பற்றுவது போல் காண்பித்துக் கொள்வதில் தான் நம் மக்களுக்கு எவ்வளவு ஆர்வம்...ஆசை....அடடா..

அதைத் தான் என் பள்ளியும் செய்தது. அந்த அழகிய கொடுமையைக் கேளுங்களேன்

என் பள்ளி ஆயாக்களை வைத்து மிகக் கடுமையாக வேலை வாங்கி ஓரளவுக்குத் தூய்மையாகத்தான் இருக்கும். ( எங்களைப் போல் பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவர்கள் தூய்மை கடைபிடிப்பது மிகப் பெரிய வல்லரசைக் கட்டி ஆள்வது போலத்தான்) சரி நிகழ்ச்சிக்கு வருவோம்

அன்று.....

அனைத்து ஆசிரியர்களும் ஒரு சிறிய பாலிதீன் கவரில் குப்பைகளைக் கொண்டு வந்தனர். அதைக் பார்த்ததும் எனக்குள் குழப்பமாக இருந்தது. ( பிரேயருக்கு முன்)

எப்போதும் தூய்மையான மைதானத்தில் நின்று பிரேயர் பாடும் நாங்கள் அன்று சிறிது குப்பைகளுக்குள் நின்று பாடினோம்.


வழக்கம் போல் அசெம்பளி ஆரம்பிக்கப்பட்டது. நமது பாரதப்பிரதமர் தூய்மை இந்தியா என்று சொல்லி இருக்கிறார். எனவே நாமும் தூய்மையாக இருக்க வேண்டும். நமது சுற்றுப்புறத்தை நாம் தூய்மையாக  வைத்துக் கொள்ள பாடுபட(? )வேண்டும் என்று ஒரு நீநீநீண்ண்ண்ண்ண்ண்ட பிரசங்கம் செய்தார். ( தூய்மைக்கும் அவர் பிரச்ங்கத்திற்கும் அவ்வப்போது சம்மந்தம் இருக்கிறார்போல் பார்த்துக் கொண்டார்.)

இப்போது நாம் தூய்மை செய்யப் போகிறோம் என்று சொல்லிவிட்டு.. மேலும் கொண்டுவந்திருந்த குப்பைகளை ஆங்காங்கே தூவி விட்டதோடு மாணவர்கள் சிலரை சாக்லேட்  சாப்பிட வைத்து அதையும் அங்கேயே போட வைத்தார்கள்

 (மற்ற நேரத்தில் தெரியாமல் ஒரு சிறு காகிதம் போட்டால் கூட” உங்களுக்கு யார் மீதும் இரக்கம் இல்லையா? ஒருவர் இதனை தூய்மை செய்ய என்ன பாடுபடுவார்?” என்று தேர்வு சமயங்களிலும் நிற்க வைத்து அட்வைசி நேரம் தின்பார்கள்.

ஆனால்  பல மாணவர்கள் முடிந்த அளவு தங்கள் பைகளில் இருந்த குப்பைகளைக் கொண்டு வந்து போட்டனர். பிறகு ஒரு ஆசிரியர் காபி குடித்து அங்கேயே பேப்பர் கோப்பைகளைப் போட்டார.

இப்படியாக போட்டவைகளை மாணவர்களே அள்ளினர். பல நிருபர்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களில் பணிபுரியும் அண்ணன்களும் சித்தப்பாக்களும் அதனை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மாணவிகளை  ” பாப்பா”  என விளித்து அப்படி பார்..இப்படித்திரும்பு...அங்கே பார்த்து நில் என்று பல்வேறு கட்டளைகளோடு...

மாணவ மணிகளும் எங்கே தனது புகைப்படம் அல்லது வீடியோவை தூய்மை இந்தியா திட்டம் அறிவித்த பிரதமர் மோடி அவர்களே கண்ணுற்று பாராட்டப் போவது போலவே “போஸ்” கொடுத்துக் கொண்டிருந்தனர்.  பல பேர் இரண்டு பீரியட் வீணானது குறித்து மகிழ்வுடன் காணப்பட்டனர். ஒரு மாணவன் கொரில்லாவிடமிருந்து தப்பித்தேன் என்று சப்தம் போட்டு சொல்லிக் கொண்டே  மகிழ்வாகக் காண்ப்பட்டான்.

( எங்கள் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர்கள் அப்பா அம்மா வைத்த பெயர்தவிர இப்படியும் சில அன்பு வார்த்தைகளால் மாணவ மணிகளால் நாமகரணம் சூட்டப்பட்டு அன்போடு அழைக்கப்படுவார்கள் )

ஒரே ஒரு நன்மை மாணவர்கள் பலரில் தங்கள் பைகளை சுமந்து மட்டும் தான் வருவார்கள் அதனுள் என்ன இருக்கிறது என்று அவர்களுக்கே தெரியாது. அன்று அதைக் கண்டு” தெளிந்தனர்.”

ஏன் இந்த வேண்டாத வெட்டி வேலை?

(மீடியாக்கள் பல செய்திகளை இப்படித்தான் வெளியிடுகிறதோ?)

மறுநாள் அவ்ளோ பெரிய செய்தித்தாளில் ஒரு சிறிய (வள்ளுவரின் திருக்குறளை விடச் சிறிதாக ) செய்தி வந்ததால் இவர்கள் நாட்டுக்கோ அல்லது எங்களுக்கோ அறிவிக்க விரும்புவதும் தெரிவிக்க விரும்புவதும் என்ன?
 பொதுத் தேர்வுக்குத் தயாராகும் நிலையில் எங்களுக்கு இந்த நேரத்தை வீணடித்தது சரியா? ( படிக்க என்று நேரம் ஒதுக்கி விட்டு அந்த நேரத்தை இவர்களே பறித்துக் கொண்டார்களே)

இதையே நாங்கள் மட்டும்செய்திருந்தால் நீ எல்லாம் எதுக்கு ஸ்கூல் வரே????சே! வெட்டி தெண்டம் என்று திட்டும் இவர்களை யார் வெட்டி தெண்டம் என்று திட்டுவார்கள்?????

 
                                            

Thursday 27 November 2014

பாதித்த சம்பவம்



                                                                                                          என் பள்ளியில் மிக மிகத் தீவிரமாக தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த நேரமது:

ஒரு மாணவி வகுப்பில் அழுது கொண்டிருந்தாள்....நாங்கள் கணினி பயிற்சிக்கு சென்று வந்திருந்தோம்.

அவளிடம் காரணம் கேட்டோம்

அழுகையினூடே அவள் தெரிவித்தது.

சில காலமாக ஒரு மாணவன் அவளை தொந்தரவு செய்துள்ளான்

தொந்தரவு என்றால் எப்போதும் அவளைப் பார்ப்பது, வகுப்புக்கு வெளியே செல்லும் போது கூடவே வருவது, டியூஷன் செல்லும் போது கூடவே வருவது போன்றவை.

அவளுக்கு அது மன உளைச்சலைத் தந்ததால் இனி பொறுக்க வேண்டாம் என்று பள்ளி முதல்வரிடம் தெரிவித்துள்ளாள்

புகார் கொடுத்து விட்டு வரும் போது இவளைப் பார்த்து எங்கே போனாய் என்று கேட்டுள்ளான்

இவள்அதிர்ச்சியுடன் ஏதும் பேச வாய் எடுக்குமுன்......நீ பிரின்சிபால் மிஸ்ட்ட என்னைப் பத்தி புகார் சொன்னியா என்று சற்று சத்தமாகக் கேட்க இதற்குள் பயிற்சிக்குச் சென்ற அனைவரும் வகுப்பறைக்குள் நுழைய....இவன் காட்டுக் கத்தலாய்....”ஆமாண்டி. நான் உன்னைத்தான் காதலிக்கிறேன்...என்ன செய்வ?” என்று கேட்டிருக்கிறான்.

மாணவர்களில் பலர் இப்படிக் கேட்ட மாணவனை விட்டு விட்டு இவளை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு சென்றுள்ளனர்.

இவள் அதை நினைத்து குடம் குடமாக அழுது கொண்டிருக்கிறாள். ஆனால் அவனோ ஏதோ சினிமாவில் காட்டுவது போல அன்று முழுவதும் மிகவும் ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருந்தான்.. ( இத்தனைக்கும் அவனை அவள் கடுமையாகத் திட்டியிருந்தாள்)

அந்தப் பெண்ணின் அழுகை முகத்தில் நான் பார்த்தது

1. இந்த நிகழ்வு எப்படி மற்றவர்கள் முன் எடுத்துக் கொள்ளப்படும்?

2. இவளின் பெற்றோர் அவனை விட்டுவிட்டு இவளைத்தானே திட்டுவார்களா?


                             

Tuesday 25 November 2014

இஞ்ஜினியரிங்

இன்றைய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் கனவுப் படிப்பு

எல்லாப் பள்ளிகளையும் போலவே எங்கள் பள்ளியிலும் பொறியியல் படிப்பிற்கான வழிகாட்டுதல் வகுப்பு நடந்தது.

என்ன நடக்கிறது என்று பார்ப்போமே என்று கலந்து கொண்டேன்.

நான் எதிர்பார்த்தது :

இஞ்ஜினியரிங் ல்

  என பல பிரிவுகள் உண்டு

இதில் என்னென்ன பிரிவுகளில் எது சார்ந்த படிப்புகள் கற்பிக்கப் படுகின்றன ? அவற்றின் பயன்பாடுகள் , அவை எந்த வகையில் நமக்கு உதவும்? அவற்றின் அவசியம், வருங்காலத் தேவைகள், எந்தக் கல்லூரியில் சிறந்த கல்வித்திட்டமும் பாடத்திட்டமும் உள்ளது?  போன்ற தகவல்கள் தரப்படும் என்று எதிர்பார்த்துச் சென்றேன்.

ஆனால் அங்கு நடந்தது:

இஞ்ஜினியரிங் எந்த கல்லூரியில் படித்தால் கேம்பஸ் இண்டர்வியூ உள்ளது?

எந்த இஞ்ஜினியரிங் படித்தால் என்ன சம்பளத்தில் வேலை கிடைக்கும்?

எந்த இஞ்ஜினியரிங் சம்பளம் அதிகம்?

நுழைவுத்தேர்வுக்கு எந்த  அகாடமியில் படித்தால் செலவு குறைவாக இருக்கும்?( அவர்களிடம் தான் படிக்கணுமாமாமாமாம்)

இப்படி பணம் ....பணம்.....பணம்.....என்று பணம் சம்பந்தமாகவே ஓடியது அந்த வழிகாட்டுதல்(?????!!!!!!) வகுப்பு

இன்றைய சமுதாயத்தினர் அனைவரும் பணம் சார்ந்தே யோசித்து , பணம் சார்ந்தே நின்று, பணம் சார்ந்தே நடந்து பணம் சார்ந்தே செயல்படுகின்றனர்

அதில் பள்ளி மாணவர்களும் விதிவிலக்கல்ல

ஆனால் இது TOOOOOOO MUCH வாகவே என் மனதிற்குப் பட்டது.

நான் எதிர்பார்த்த எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

அதெற்கென அம்மாவிடம் பெற்று வந்து கட்டிய தொகையான 200 ம் மகா வீண்.

அடடா.!.என்னையும் பணம் பற்றி சிந்திக்க வைத்து விட்டார்களே....???                                        


                                  

Friday 24 October 2014

பனி விழும் மலர் வனம்

நேற்று இரவு பனிமயமாக காட்சியளித்த பெரியார் நகர் ( புதுகை மாவட்டம் )
 பனியில் அமர்ந்து அசைப் போடும் மாடுகள் (பெரியார் நகர்)

குரான்

உலகிலேயெ மிகவும் சிறிய குரான்(பஷீர் அலி அங்கிள் காட்டியது)

Wednesday 22 October 2014

இது காதலா?

நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துகொண்டுயிருக்கிறேன் என் பள்ளியில் ஒரு சம்பவம்:


       வெளியில் இருந்து பார்பதற்க்கு பிரம்மன்டம்மாக இருகும் எங்கள் பள்ளியின் உள்ளே நுழைந்த போது என்னுள்   ஹாரிபாட்டர் ஹாக்குவர்ட்ஸ் ஸ்கூலில் நுழைந்தது போல மிகவும் பெருமிதமாக இருந்தது.

ஆனால் நுழைந்து ஓரிரு மாதங்களில் அதன் பிரமாண்டம் தந்த ஆச்சரியம் அனைத்தும் அற்பமாய் மாறிப்போனது.

(இந்த நேரத்தில் நான் என்னைப்பற்றிச் சில விஷயங்களை சொல்லியே ஆகவேண்டும்

நான் தமிழ் கலாசாரம், பண்பு...போன்ற சில  ஏற்றுக் கொள்ளக் கூடிய பழமையான பழக்கங்களோடு வளர்ந்தேன். எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டியும் இல்லை...புத்தகம் புத்தகம் மட்டுமே எங்கள் பொழுதும் ...போக்கும்).

என்னுடைய பழைய பள்ளியின் தலைமைஆசிரியர்(முதல்வர்) நிறையக் கட்டுப்பாடுகளுடன் மிகவும் கண்டிப்போடு கூடிய கண்ணியத்துடனும் பள்ளியை நிர்வகித்து வந்ததால்...தவறுகள் ...சில சமயம் குறைக்கப்பட்டும் பல சமயங்கள் மறைக்கப்பட்டும் இருந்தன. அவற்றை ஆராயும் நோக்கு எனக்கு இல்லாததா;ல் அவற்றைப்பற்றி சரியாகத் தெரியாது.

ஆனால் இங்கு அந்த கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி மேற்கத்திய கலாசாரத்தோடு ஒட்டிப்பிறந்தவர்கள் போல் இயங்கி வந்தனர். மாணவர்கள் அடிக்கும் கூத்து தாங்க முடியாது. ஆசிரியர்களுக்கு கோபம் ஏற்பட்ட போதும் பள்ளி நிர்வாகத்திற்கும் அவர்கள் தரும் சொற்ப கூலியும் போய்விடக்கூடாதே என்ற அச்சத்திலும் யாரையும், எதற்கும் கண்டிப்பதில்லை.

(எங்கள் பள்ளியின் முக்கியமான விதி மாணவர்களை அடிக்கவோ திட்டவோ கூடாது). ஆனால் பெற்றோர்களிடம் மட்டும் வாய் கிழியக் கிழிய வியாக்கியானம் பண்ணுவார்கள்.

மாணவர்கள் ஒரு பக்கம் என்றால் மாணவிகள் அடிக்கும் கூத்தைஎன்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை

ஆண், பெண் நட்பு சரியானது தான் என்று பலர் வாதிடக் கேட்டிருக்கிறேன். எனக்கும் அந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு. ஆனால் இங்கு வந்த பிறகு அதனை ஏற்கும் மனநிலை சுத்தமாகப் பறி போய் விட்டது.

ஏனெனில் அவர்கள் கை கோர்த்துக் கொண்டு சுற்றுவதும், வகுப்பில் ஆசிரியர்கள் இருந்தாலும் இல்லாதது போலவே பாவித்து அவர்கள் அடிக்கும் கூத்தையும் , இதயத்தில் அம்பு விடும் குறியீடோடு அவர்கள் பரிமாறிக் கொள்ளும் பிறந்த நாள் பரிசுகளையும், பிப்ரவரி 14 அன்று பள்ளி படும் பாட்டையும் பார்த்தால் யாருக்குத்தான் ஆண், பெண் நட்பு சரியெனத் தோன்றும்?

என் அம்மாவும் கூட சூடத்தில் சத்தியம் அடித்துச் சொன்னால் கூட நம்ப மாட்டார் போல.

இந்த வயதில் வரும் உணர்வுகள் காதலாக இருக்குமா? இது இவர்களுக்குப் புரியுமா? இதற்கு யார் காரணம்? ?

பெற்றோர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைப்பதெல்லாம் எதற்கோ? என்ற வேதனை என்னை துளைத்து எடுக்கிறது.

ஆனால் நானும்  இப்போது கண்டும் காணாமல் வலம் வருகிறேன். எனது பிரமாண்ட மான(?!) பள்ளியில்.



   

தமிழ் படும் பாடு

 1.” கத்தியின்றி ரத்தமின்றி ” ____ என்ற பாடலை எழுதியவர் யார்?

நாமக்கல் கவிஞர் என்று நான்காம் வகுப்பிலேயே படித்து விட்டேன்

.( இந்த விஷயம் நாலாப்பு பிள்ளைக்குக் கூடத் தெரியும். ஆனால் எனக்கு பத்தாம் வகுப்பு தமிழ் எடுத்த ஆசிரியருக்கு ஏனோ தெரியவில்லை).

பாரதியார் என்று என்னிடம் பலமாக வாதாடினார்.கண்ணை மூடிக் கொண்டு சூரியனை காணவே இல்லை என்று சொல்பவரிடம் சண்டைக்கா போக முடியும்? நான் ஒருவேளை மீண்டும் வலியுறுத்திச் சொன்னால் என் மதிப்பெண் குறைக்கப்படலாம். அல்லது மாணவர்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்படலாம்.( அட அவங்களுக்கும் தான் தெரியலையே....இந்தம்மா சொல்றது தான் வேதம்னு நினைச்சாங்க)

2. ”அயோத்திதாசர் சென்னையில் உள்ள மக்கிமா நகரில் 1845 ஆம் ஆண்டு மே திங்கள் பிறந்தார். ...” இது பத்தாம் வகுப்புத் துணைப்பாடத்தில் உள்ள வரிகள்..( பக்கம் 213)
இதனை என் தமிழ் அம்மா விளக்கி 1845 ஆம் ஆண்டு மே மாதம் திங்கட்கிழமை பிறந்தார் என்று கூறினார்...

(அய்யோ...அய்யோ....!!)

எனக்குச் சிரிப்பு தாங்க வில்லை...

அது எந்தத் திங்கள் கிழமை அம்மா ? மாதத்தில் 4 திங்கள் உள்ளதே? என்று நக்கலாகத்தான் கேட்டேன்.

வெறும் திங்கள் என்று தந்தால் அது முதல் திங்களாகத்தான் இருக்கும் என்று விளக்கம் வேறு தந்தார்.

3. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில்...   குலசேகர ஆழ்வார் எழுதிய “மீன் நோக்கும் நீள்வயல் சூழ்...” என்று தொடங்கும் பாடல் அவர்களிடம் பட்ட பாடு இருக்கிறதே.... அடடா...அடடா...

மீன்கள் வயலுக்கு கிணற்றிலிருந்து பம்பு செட்டு மூலமா வந்து இறைவனை வேண்டும். அதுதான் வித்துவக் கோட்டையின் சிறப்பு ..என்று அந்த அர்த்தத்தைக் கொன்று விட்டார்....

குல சேகர ஆழ்வார் காலத்தில் ஏதுங்க பம்பு செட்டு?

பாடலின் அர்த்தம் கூட கீழே விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.... ஆனால் அதனைக்கூடத் தெளிவாகச் சொல்லாமல்..போனார் அந்தத் தமிழ் அம்மா...

குறைந்த கூலிக்குக் கிடைக்கிறார்கள் என்று ஏதோ படித்தவர்களை , தமிழில் சிறிதும் ஆர்வம் இல்லாதவர்களைத் தான் நிர்வாகம் நியமித்துள்ளது...

அய்யோ...... சரியான விளக்கத்தை சொல்லலாமே என்று நான் என் சக மாணவிகளுக்கு விளக்க....அவர்களோ என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு அதனை ஏற்கத் தயாராய் இல்லை.

இப்படித்தான் ”””டமில்”””””” ஆசிரியர்களிடம் நம் தமிழ் படாதபாடு படுகிறது...இவர்களிடம் படித்தால் தமிழ் எப்படி வளரும்???

பாரதியார் தான் என் நினைவில் வந்தார்..”மெல்லத் தமிழ் இனி......????????”


Sunday 5 October 2014

தவறான பாடம்

      பிளஸ் 2 வில் nuclear physics  என்ற  தலைப்பில் ஒரு பாடம் உள்ளது அதில் radio carbon dating என்ற உப தலைப்பில் carbon  இன் half life period வேதியியல் பாடத்தில் 5700 years என்றும் இயற்பியல் பாடத்தில் 5570 என்றும் எழுதப்பட்டிருக்கிறது

 . ஒரு ஆசிரியரிடம் சந்தேகம் கேட்டேன் . அவர் physics தேர்வுக்கு அப்படி எழுது chemistry தேர்வுக்கு இப்படி எழுது என்று சொன்னார் .

        இதாவது பரவாயில்லை .தமிழில் உவமைக்கவிஞர்  சுரதா வை வாழும் கவிஞர் என்றே எழுதச்  சொல்கிறார்கள் .

இதனைக்  கல்வித்துறை கவனிக்காதா? தவறானதை இவ்வளவு காலம் ஆசிரியர்கள் எப்படி ஏற்று நடத்துகிறார்கள் ? மாணவர்களுக்கு  குழப்பம் ஏற்படாதா ? பிறகெப்படி நாங்கள் உணர்ந்து படிப்பது?அதுவும் பொதுத்தேர்வில் இப்படியா?


 தவறானதைத் தான் நாங்கள் படிக்க வேண்டுமா ?இப்படி தவறானதை த் தான் திருத்துவார்களா ? எங்களுக்கு ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிக மிக முக்கியமானதல்லவா?

 இதை விடக் கொடுமை என்ன வென்றால் physics பா டத்தில் 5,9,10 ஆகிய பாடங்களுக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. ஏனென்றால் ஒரு கேள்வி மட்டுமே அதிலிருந்து கேட்கப்படும். எனவே அதற்கு முக்கியத்துவம் இல்லை.

 ஆனால் அந்தப் பாடம் தான் ECEஇஞ்சினியரிங் ல் மிகவும் முக்கியம் .பிறகெப்படி நாங்கள் கல்லூரி வகுப்புகளில் மிளிர்வோம் ? இவர்களே எங்களை இப்படி நடத்தினால் நாங்கள் என்ன செய்வது?இதற்கு யாரேனும் முயற்சி எடுத்து மாற்ற மாட்டார்களா ?

இப்படிக்கு படிக்க விரும்பும் மாணவி

Sunday 21 September 2014

தேர்வு நினைவுகள்

போன வருடம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்காக அதிகாலை எழுந்து பள்ளிக்குக் கிளம்பும் முன் என் அம்மாவின் ஆசை முத்தங்களை வாங்கிக் கொண்டுஅம்மாவுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றோம்.

தேர்வறை திறக்கப்படும் வரை வாசலில் காத்திருந்து என்னை வழியனுப்பிச் சென்றாள் அம்மா...அம்மாவின் முகத்தைப் பார்த்துவிட்டு தேர்வு எழுத் போனதில் அலாதி அன்பும் பிரியமும்...தேர்வு நாட்களில் என் தோழிகள் எதையோ பற்றி மிகத் தீவிரமாக பேசிக்கொண்டிருப்பார்கள்...புதர் தலை, கல் பெஞ்ச் என்று ஒன்றிரண்டு வார்த்தைகள் காதில் விழுந்தது...அதைக் கேட்க ஆர்வம் எழுந்ததில்லை..

அறிவியல் தேர்வு வீடு வந்த அன்று அம்மா என்னிடம் சொன்னார்...பள்ளியில் ஒரு பையனும் பெண்ணும் ( வேறு பள்ளியில் இருந்து தேர்வு எழுத வந்தவர்கள்) அருகருகே கல்பெஞ்ச் ஓரத்தில் அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருந்ததாகவும் வந்திருந்த அனைத்து ப் பெற்றோர்களும் அருவருப்பாகவும், பிடிக்காமல் பார்த்ததாகவும் கூறினார்....( additional information)  அவன் தலை புதர் போலவும் இருந்ததாம். என் தோழிகள் பேசிக்கொண்டதற்கு ஓரளவு க்கு அர்த்தம் புரிந்தது.

.கடைசித் தேர்வன்று என்னிடம் கூப்பிட்டுக் காண்பித்தார் அம்மா.. இந்த உலகம் மறந்து அப்படி அளவளாவிக் கொண்டுருந்தார்கள்.. எனக்கே சந்தேகம் வந்தது...அவர்கள் தேர்வில் தேறுவார்களோ என்று....கொஞ்சம் அருவருப்பாகவும் இருந்தது.அம்மாவிடம் அங்கே பார்க்காமல் போய் வேலைக்குப் போற வேலையைப் பாருங்கம்மா என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டுப் போனேன். வழக்கம் போல் ஒரு புன்னகையோடு என்னைவிட்டு அகன்று போனார்.

அவர்கள் வீட்டில் எப்படி இந்தப் பிரச்சனையைச் சமாளிப்பார்கள்? அவர்கள் பெற்றோர்களுக்கு இது தெரியுமா தெரியாதா? பல கேள்விகள் தான் என்னுள்...

இந்த வயதில் இதெல்லாம் தோன்ற யார் காரணம்?  ஊடகங்களா?....

உன்னால் முடியும் தம்பியில் ஒரு பாடல்....அக்கம் பாருடா சின்ன ராசா...ஆகாசப்பார்வை என்ன சின்ன ராசா......ஞாபகம் வந்தது.....