Saturday 12 December 2015

வெட்கித் தலை குனிகிறேன்...பெருமையுடன் கர்வமாய் நிமிர்கிறேன்

வெட்கித் தலை குனிகிறேன்..பெருமையுடன் கர்வமாய் நிமிர்கிறேன் என்ற தலைப்பைப் படித்ததும் உங்களுக்கு சத்தியமாய் தலை சுற்றியிருக்கும். அல்லது என்னை பைத்தியம் என்று நினைத்திருப்பீர்கள்...கேளுங்கள்

வெட்கித் தலை குனிகிறேன்
******************************

நம் நாட்டில் தான் இருந்தது நாளந்தா பல்கலைக்கழகம்..இங்கே வானியல், இயற்பியல், வேதியல், சமூகவியல், உளவியல்,விலங்கியல், என்று அனைத்து வகையான இயல்கள் என்று மொத்தம் 118 வகைப் பாடங்கள் இருந்ததாகவும் அன்றைய நாளில் நாம் அனைத்து வகையிலும் சிறந்த மனிதர்களாக வாழ்ந்ததாகவும் பிற்காலம் வந்த பல்வேறு படையெடுப்புகளால் அவைகள் அழிந்ததாகவும் படிக்கிறேன்..அப்படி பட்ட முன்னோருக்கு பிறந்தவர்கள் தான் நாமா?

சிபி என்று சக்கரவர்த்தி இருந்தான். இவன் புறாவிற்கு தன் தொடைக்கறியைத்தந்தானாம்.
 இப்படியாக, பாரி, காரி, அரிச்சந்திரன், ராமன், என்றும் பல்வேறு அகிம்சைக் கதைகள் அன்புகதைகள், உண்மை பேசும் கதைகள்

எல்லாம் படித்து வளர்ந்தவள் பேசுகிறேன் , கேளுங்கள்,

வரும் முன் காப்போம் என்பது தானே நமது கோட்பாடு..ஆனால் இவ்வளவு இடர்கள் வந்த பின்னே அவர்கள் உதவினார்கள், இவர்கள் கொடுத்தார்கள் என்று பேசியும் செய்தும் வருவதில் எவ்வளவு இழப்புகள்??எவ்வளவு போராட்டங்கள்??எவ்வளவு தடுமாற்றங்கள்? எவ்வளவு உளவியல் போராட்டங்கள்?

ஹாங்காங் சூறாவளியால் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும். அங்கே ஒரு மணிநேரத்திற்கு நூறு கிலோமீட்டர் வேகத்துடன் காற்று வீசும் ஆனால் அங்கேயுள்ள கட்டிடங்கள் அதனைத் தாங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளன.

பூமியில் மனிதன் வாழத் தொடங்கியது முதல் பல்வேறு இழிவுகள், அழிவுகள், இழப்புகள் சந்தித்துள்ளது ஆனால், இப்போது சந்தித்திருக்கும் அழிவுகள்???

அன்றைய தினத்தின் இரவில் விடிய விடிய கொட்டும் மழையில் மொட்டை மாடியில்...நின்ற எல்லோருக்கும் தெரியும் உயிரின் வலியும் வேதனையும்..

மாடியிலிருந்தும் வழிந்த தண்ணீர், பூமியிலிருந்து இரண்டாவது மாடி வரை எட்டிய நீர்...

பூட்டிய வீடுகளுக்குள் தண்ணீரில் மிதந்த பிணங்கள்.

தனியார் மாணவர் விடுதியில் மிதந்த மாணவர்கள்...



இது எப்படி நடந்தது?

நகரத்தின் நீர் நிலைகளை அழித்தல், மோசமான கட்டமைப்புக்கும் அனுமதி அளித்தல், என்று நகரத்தின் திட்டமிடலில் அடிப்படையில் இருந்து பிழை...பிழை...சொன்னது மழை

அதுதான் தவறென்றால் ஒரே நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் 29,000 கன அடி தண்ணீரும் அடையாற்றில் 90,000 முதல் 1,00,000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது..அவர்களுக்கே தெரியவில்லை என்று மழுப்பப்பட்டாலும் போன உயிர் எப்ப்டி திரும்பி வரும்/

மூன்றாம் வகுப்பு படிக்கும் பையன் தன் தந்தை தாய் என்று எல்லோரையும் இழந்து வீதியில் நிற்கிறான். இப்போது அவனுக்கு எது வீடு என்று அடையாளம் காட்டக் கூடத் தெரியவில்லை. நாகரீகத்தையும் பழகும் முறையையும் பார்த்தால் படித்த வேலை பார்க்கும் பெற்றோருக்கு பிறந்தவனாய்த் தெரிந்தான்.

எச்சரிக்கை விடுக்கும் முன்பே மின்சாரம் இல்லை. எனவே தொலைக்காட்சி  செல்பேசி என்ற எந்தத் தகவல் தொடர்பும் இல்லை. மேல் கரையில் அறிவித்துவிட்டு கீழ்கரையில் அறிவிக்கும் முன்பு தண்ணீர் புகுந்தது,

உண்மையில் உயிர் பிழைத்தவர்கள் எல்லாம் மறு பிறப்பு என்று தான் சொல்ல வேண்டும்

பாலத்திற்கு அடியில் எத்தனை குழந்தைகளின் தலைகள்,? யாருமே கேட்க வரவில்லை என்றால் அவர்கள் சொந்தக்காரர்களும் போய்விட்டார்கள் என்று தானெ பொருள்??

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி 228 மட்டுமே நீர் இருப்பு ஆனால் அது ஒரே நாளில் 791 ஆக உயர்ந்தும் என்ன தான் செய்தார்கள்?

ஒரு அரசு நதி நீரை வீட்டு மனைகளாக்கி கொடுத்து இருக்கிரது. அடுத்து வந்த அரசு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறது. பிறகு தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர்,

சத்தியமாய் உங்கள் அரசியல்வாதிகளை, நான் குறை சொல்ல வில்லை. கட்சிகளையும் குறை சொல்ல வில்லை..செய்யாததைச் செய்ததாகவும், பாராட்டிக் கொண்டே இருங்கள் அவ்வளவு பக்தியையும் அவர்களிடம் காட்டிக் கொள்ளுங்கள்..

யார் யாரோ பிறந்து சிறந்து வளர்ந்த பூமியில் இத்தனை அதிகாரிகள், இத்தனை அலுவலர்கள் எல்லாம் படித்தவர்கள் தானே? என்ன செய்தீர்கள்? இந்த இடத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்கக்கூடாது என்றோ இத்தனை மாடி கட்டப்படக்கூடாது என்றோ ஏன் சொல்ல வில்லை? கேட்கவில்லை? செயல் படவில்லை?

எங்கிருக்கிறது உங்கள் சிக்கல்?எந்த சட்டங்களைப் பின்பற்றினார்கள்?ஒருவருமே ஒரு வார்த்தையும் கேட்கத் தோன்றவில்லையா? துணிவில்லையா?

இப்போது உங்களை வணங்கி உங்கள் பாதையில் நடப்பதா? மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்ந்து விடு பாப்பா என்று உமிழ்வதா? அல்லது வெட்கித் தலை குனிவதா?

உங்கள் முன்னோர்கள் என்று சொல்ல ஒரு நெடிய கதை இருக்கிறது. ஆனால் எங்களுக்கு நீங்களா முன்னோடிகள்? உங்களையா நான் எனக்குப் பின்னான தலைமுறைகளுக்குச் சொல்லிக் கொடுப்பேன்?

அதோடு உதவி செய்ய வந்த பலர் தங்கள் முகநூலில் போட்டுக் கொள்வதற்கு புகைப்படம் எடுத்துக் கொண்டீர்களே? அடடா? ஆவணம் முக்கியம் அய்யா.

சோகமாய் கிடக்கும் பெண்கள் , பரிதவிக்கும் பெண்கள் என்ற தலைப்பில் நீங்கள் போட்டுக் கொண்ட புகைப்படங்கள் அடடா..உங்களுக்கு ஆஸ்கர் அல்லது அதனை விட உயரிய விருதுகள் தரும் தான்..

********************************************

பெருமையுடன் கர்வமாய் நிமிர்ந்தேன்
****************************

ஏதேதோ ஊர்களில் இருந்து வந்தார்கள் துப்புரவுத் தொழிலாளர்கள், சாலைகளை சரி செய்ய.ஒரு தாசில் தார் ரோடு கூட்டுகிறார்.

ஒரு இளைஞன் , எந்த வழிசல்களும் இல்லாமல் பல பெண்களுக்கு உதவுகிறான்.

இஸ்லாமியர், ஜெயின், கிறித்தவர் என்று ஒருவருக்கு ஒருவர் பல உதவிகள்..

வீட்டில் ஒரு பொருளும் இல்லாமல் மழை அடித்துப் போனது என்ற போது மாற்றுக்குத் துணியில்லாமல் ஈர உடையோடு இருந்த போது, புதிய ஆடைகள் வழங்கிய உள்ளங்கள்,

மாவட்டம் எல்லாம் பார்க்காமல் வேறு வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்

குறிப்பார் எங்கே மின் கம்பங்கள் சாய்ந்து அதன் ஒயர்களெல்லாம் அறுந்து தொங்கிய போதும் கவனமாய்  பிரித்து மீண்டும் மின்சாரம் வர உதவிய மின்சாரத் துறை ஊழியர்கள்

திரைப்படங்களில் ஒரு தோசைக்குக் கூட தன் கம்பீரத்தை விற்கும் காவலர்கள் செய்த சேவைகள்..

எல்லோருக்கும் நீங்களும் சொல்லுங்கள் உங்களின் நெஞ்சத்தின் ஈரத்தால் ஒரு வீர வணக்கம்..

அவர்களுக்காக பெருமைப் படுகிறேன்..

அதோடு இவ்வளவு பேரழிவு நடந்து என் தந்தையோடு தொடர்பு கொள்ள இயலாமல் தவித்த பொழுதுகள் தந்த ரணம், அப்பா நாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்று நாங்கள் மௌனமாக அலறிய பொழுதுகள்

யாரோ ஒரு அம்மாவுக்கு தன் பிள்ளைகளைக் காணோம்..பிள்ளைகளுக்குத் தன் அம்மாவை அப்பாவைக் காணோம்..

எல்லாம் பொருட்களோடு பொருட்களாய் போய் செர்ந்தார்கள் என்று அறியும் வயதா இது?

இன்னும் நான் பெருமை கொள்ள இருக்கிறது என் அன்பின் சுடர்களே

அது

இவ்வளவு சூழலில் இருக்கிறோம் என்ற பின்னும் எங்கள் அப்பா கடலூருக்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவியது,

ஒவ்வொரு வருடமும் தன் பிறந்த நாள் மட்டும் அல்லாது தனக்கு அம்மா கொடுக்கும் காசெல்லாம் சேர்த்து வைத்து எந்த புகைப்படமும் எடுத்துக் கொள்ளாமல் முகநூலிலும் வெளியிடாமல்ஏழைச் சிறுவர்களுக்கு கல்விக்கு  உதவும் என் தங்கை..

நாங்கள் இரண்டு நாட்களாய் பட்டினி கிடந்த போதும், உதவிப் பொருட்கள் வந்து தந்த போதும், இல்லையம்மா..இது நமக்கானது இல்லை, நாம் வாங்கக் கூடாது, ஏனெனில் நான் வேலை பார்க்கிறேன்..அதற்கு மாதாமாதம் ஊதியம் வருகிறது அதில் தான் நாம் சாப்பிட வேண்டும் இது இல்லாதவர்களுக்காக : ;நமக்கு வேண்டாம் என்று மறுதலித்த என் அம்மா..

( இரண்டு நாட்களாய் மீட்புப் பணிக்கு மருத்துவமனைப் பணிகளுக்கும் உதவிகள் செய்ய சென்று விட்டார்)

மின் இணைப்பு வந்த பிறகு எங்களை அன்போடு விசாரித்த நல் உள்ளங்கள்..அடடா...நான் ஒரு தேவ உலகத்தில் இருக்கிறேன் என்று சொல்ல வைத்த பொழுதுகள்..

இன்னும் திடம் கொண்டிருக்கிறேன்..

இனியும் நான் எப்படிப் பொறுப்பது??

என் வேலை என்ன என்று தெரிந்து விட்டது. படித்து அதன் மூலம் வேலை பெற்று என் வருமானத்தில் பாதியை மட்டுமே என் குடும்ப செலவிற்கு மீதி 50 சத்வீதம் படிக்கும் குழந்தைகளுக்கு. மருத்துவத்திற்கு, இல்லாதோருக்கு என்று செலவிடப் போகிறேன். நிச்சயம் என் குடும்பம் அதை ஏற்கும். போன பொழுகள் போகட்டும் இனி வரும் காலமெல்லாம் என்னால் முடிந்த அளவுக்கு பணி புரியப் போகிறேன்.

அந்த நாளில் என் சமூகமே தலை நிமிரும்...நாங்கள் சூரியத் தோரணங்கள் தான்..


No comments:

Post a Comment