Friday 25 December 2015

அம்மாவிற்கு ஒரு கடிதம்

அன்புள்ள அம்மா...

தலைமை ஆசிரியர் என்ற மதிப்பு மிகு பதவியில் இருக்கும் உங்களுக்கு பொறுப்புகளும் கடமைகளும் அதிகம்.அதோடு கவிஞர், பேச்சாளர்,தொண்டு செய்பவர், இயக்க வாதி.என்று வெளியோருக்கும் .தாய்..மனைவி,மகள்,மருமகள்..தோழி என்று நெருக்கமாய் உணரும் சிலருக்குமாக பன்முகம் உங்களுக்கு

மகளாகவும் மாணவியாகவும் மட்டுமே இருக்கும் நான் எழுதிக் கொள்கிறேன்

இது கண்ணீரா? வருத்தமா? கவலையா? வேதனையா? என்ன என்று எனக்கே தெரியவில்லை அம்மா..

எப்போதும் நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்..உங்கள் போராட்ட வாழ்வில் வேறு யாரேனும் இருந்தால் என்ன செய்வார்களோ என்று பயம் கொள்ளும் அளவுக்கு உங்கள் துணிச்சலும், விவேகமும் பாராட்டத் தக்கது..எது இருந்த போதும் கம்பராமாயண ராமர் போல உங்களால் மட்டுமே அன்றலர்ந்த மலர் போல் இருக்க முடியும்.

மன்னிக்க வேண்டும் அம்மா..என்னால் எல்லா விஷயங்களையும் கடக்க முடியும் உங்களைப்போல ஆனால், நீங்கள் இல்லாமல் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை.இந்தத் தோல்வியை நான் ஒப்புக்கொள்ளவே வேண்டும்.

சிறு வயதில் நான் பிறந்தது முதல் உங்களோடு நானும் உங்கள் பள்ளிக்கு பயணமாகி இருக்கிறேன்..இரண்டு பேருந்துகள் மாறி, ஒரு வண்டியில் நீண்ட தூரம் செல்லும் சாலையில்,முன் பகுதியில் எனை அமர வைத்து, இரு சக்கர வாகனத்தில் ஏதேதோ என்னோடு பேசிக் கொண்டே  வருவீர்கள்..

வீடு வந்ததும், வந்த களைப்போ, வேலைப் பளுவின் சுமை ஏதுமின்றி வீடு பராமரிப்புப் பணிகள்,,

கெடுக சிந்தை கடிதிவள் துணிவே என்று ஒரு புறநானூற்றுப் பாடலை மனப்பாடப்பாடலாக வைத்திருந்தார்கள். அது போல் தான் உங்கள் மனமும்...அடேங்கப்பா..இடர்கள் வந்த பொதெல்லாம் எழுந்து நின்றதை,,எந்த தடங்களும் இன்றி கடந்து போனதை, கண்ணால் பார்த்து அயர்ந்திருக்கிறேன்..நானே இப்படி என்றால் உங்கள் நட்பு வட்டங்கள் உங்களைக் கண்டு வியந்ததில் ஆச்சர்யம் இல்லை``

தலைமை ஆசிரியர் கூட்டங்கள், கம்பன் கழகம், இலக்கியக் கூட்டங்கள், ஏன் சில முறை பட்டிமன்றங்களில் மேடையில் என்னை அமரவைத்து பேசுவீர்கள்..

அப்போதெல்லாம் அம்மாவிற்கு என்னைப் பிரிய முடியவில்லை என்று மகிழ்ந்திருக்கிறேன்..ஆனால் பின்நாளில் என்னை கவனிக்க யாருமே இல்லை என்ற வலியை நான் உணர்ந்த போது, அதனையும் நீங்கள் ஒரு சாதாரண விஷயமாகத் தான் எடுத்துக் கொண்டீர்கள் எனும் போது..அம்மா...அம்மா...வலிகளின் ரணம் என் கண்களின் வழியாக கசிந்து பெருகும்..

அம்மா...
உங்களிடம் குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்த்து விட்டு புதுகைக்கே வாருங்கள் என்றும் இந்த அரசு வேலை தான் உங்களின் அடையாளம் என்றும் சிலர் சொன்னதாகச் சொல்கிறீர்கள். உங்களின் நண்பர்களில் ஒருவர் தான் அருமை அருமையாக வளர்த்த மகளை விடுதியில் விட்டிருப்பதாகவும், உங்களுக்கு பலரும் பல வித அறிவுரைகள் வழங்கியிருப்பதாகவும் அறிகிறேன்..

நானும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்..

 ஒரு மருத்துவமனைக்கு வரும் நபர்கள் அனைவருக்கும் இடது பக்கம் நிற்கும் அனைவருக்கும் இந்த மருந்து சாப்பிடுங்கள் என்றோ,,வலது பக்கம் நிற்கும் அனைவரும் இந்த மருந்தை உட்கொள்ளுங்கள் என்றும் எந்த மருத்துவரும் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? ஒவ்வொருவரின் உடல்நலம், மற்றும் தாங்கும் சக்திக்குத் தகுந்தாற்போல் தான் மருத்துவம் பார்க்க இயலும் அது போல் தான். செல்வத்தால் செழித்துப் பிறந்த மகள் என்றாலும் அவர் விடுதியில் தங்க வைத்திருப்பதும் நான் உங்களோடு இருக்க நினைப்பதும்.

தன் மகளை விடுதியில் விட்டிருக்கும் பட்டியல்கள் நீள்கிறது. உங்கள் தோழமைகளிடமிருந்து..,,,,அந்த மருத்துவ நண்பரோ,,அந்த தலைமைஆசிரியரோ,அந்த பேராசிரியரோ,அந்த பொறியாளரோ, அறிய மாட்டார்கள் என் மன உணர்வுகளை..


மருத்துவ விடுப்பு தொடர்ந்து எடுக்க இயலாமல் ஒரு மாதம் முழுதும் திங்கள் முதல் வெள்ளி வரை நீங்கள் அங்கேயும் நானும் பாப்பாவும் இங்கேயும் இருந்ததும், எனக்கென பாப்பா சமைத்து, நாங்களே தலைசீவி, இதெல்லாம் செய்ய வேண்டியது தான் என்றாலும், நீங்கள் இருந்து இவைகளை நான் செய்தால் அது உங்களுக்கு நான் செய்யும் உதவி. நீங்கள் இல்லாமல் அதனை நான் செய்தால் அது கொடுமை இல்லையா?

அம்மா,,,,

உங்களைப் பிரிந்து வாழும் அளவுக்கு மனப்பகுவம் வாழ்க்கை நெறி முறைகளையும் அதிகம் படித்து விட்டேன் என்றோ, மனதிடம் கொண்டு விட்டேன் என்றோ நீங்களாக நினைத்துக் கொண்டீர்களா என்ன?

பள்ளிப் பாடங்களோடு பிற விஷயங்களில் என் கவனமும் கனிவும் அதிகரித்திருப்பதும் ஆழமான , அகலமான விசாலப் பார்வைகள் கொண்டிருப்பதும் அப்படி அவர்களை அல்லது உங்களை நினைக்க வைத்திருக்கிறதா என்ன???

கல்லூரியின் அறிவிப்புப் பலகையில் என் புகைப்படத்தோடு முதல் மதிப்பெண் வாங்கியவள் என்று போட்டிருந்ததை நீங்கள் பார்த்த போது உங்கள் கண்கள் மின்னிய பொழுதுகள் நான் ...மிதந்தேன் அம்மா..

கல்லூரியின் முதல்வர் முதல் இயற்பியல், வேதியல்,கணிணி, கணிதம்,பேராசிரியர்கள் உங்களை வரவேற்ற விதமும், உங்களைக் கொண்டாடிய விதமும் ,,அம்மா உங்களுக்கு என்று எப்போதும் ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு. உங்களை பெரும் பதவிகளில் இருப்போர்களும் பார்க்கும் பார்வைகளும் பழகும் விதமும் கண்டிருக்கிறேன் என்றாலும் இப்போது எங்கள் கல்லூரியில் உங்களை நடத்தும் விதம் என்னால் வந்தது என்பதில் தான் எனக்கு எவ்வளவு பெருமையும் கர்வமும் தெரியுமா அம்மா. அது நான் மறைமுகமாக உங்களுக்கு கிரீடம் தந்த பொழுதுகள்..

என் அப்பாவும் இல்லாமல்(அப்பா வெளிநாட்டில் வேலைக்குப் போய்விட்டதால்)), உங்கள் சொந்தம் யாரும் இல்லாமல் நீங்களாகவே எனை, எங்களை, வளர்த்த அந்த நிமிடங்களுக்கெல்லாம் நான் என்ன செய்து விட முடியும்? இப்படி மரியாதை பெற்றுத் தருவதை விட..

அம்மா..

பிரிவின் வலிகள் பெரிது அம்மா..

அவ்வப்போது  அப்பா வந்து போனாலும், அப்பாவின் மேல் பிரியங்களை நாங்கள் கொண்டிருந்தாலும்,,உணர்வுகளை உங்களுடன் மட்டுமே பகிர முடியும் என்பதை உணர்வீர்கள் என்றே நம்புகிறேன்..

உங்கள் சமையல் பற்றியோ உங்கள் அழகைப் பற்றியோ, உங்கள் எழுத்துக்கள் பற்றியோ நாங்கள் கிண்டல் செய்வதெல்லாம் நிஜம் இல்லை..

உன் அம்மா ரொம்ப அழகா இருக்காங்க டீ. என்று ஒரு தோழி சொன்ன போது, மற்றோரு தோழி அவங்க பெரிய கவிஞர் டீ,,பேச்சாளர் டீ என்று சொல்லிக் கொண்ட போது எனக்குள் ஏதோ பூத்தது...உணர்ந்தேன்..

என் பள்ளியில் நீங்கள் என் ஆசிரியர்களோடு உரையாடும் விதமும் அவர்களையும் அறியாமல் உங்களை அதிக மதிப்பாய் பார்க்கும் போதும் எனக்குள் பெருமை பூக்கும். என் பள்ளி முதல்வர்கள் அனைவருமே உங்களிடம் கொண்டிருக்கும் மரியாதையை மற்றொரு பெற்றோரிடம் காட்டுவதில்லை என்பது நான் கண்ட உண்மை..

நேசிப்பு என்பது அழகு ஆற்றல், அறிவு, புத்திசாலித்தனம், சாமர்த்தியம் என்று எல்லாவற்றாலும் எடுத்துக் கொள்ளப்படுவது என்றால் நான் எல்லாவிதமாகவும் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்கிறேன்..

என் பிரியத்திற்குரிய அம்மா,,

எனது கோரிக்கைகள் முற்றிலுமாக சுயநலமாக இருக்கலாம்..எனது வேண்டுதல்கள் உங்களுக்கு ஒவ்வாமைக் கூடத்தரலாம். ஆனால், என் பிரியத்திற்கு செவி சாய்ப்பீர்கள் என்றே நம்புகிறேன்..

போதும் அம்மா..நாங்கள் பிரிந்து கிடந்ததும், தவித்து பிரிவதும்..

இனி இங்கேயே இருந்து விடுங்கள்..

சமையல், சாப்பாடு, இருப்பிடம், என்று எதுவும் இல்லை எங்கள் பிரச்சனை உங்கள் அண்மை இன்றித் தவிப்பது தான் எங்கள் கவலை.

இப்போதும் கூட போய் வருகிறேன் புதுகையே என்று சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் 15 நாளில் நீங்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும் போது...எங்களை பிணிக்குள் தள்ளிவிடுகிறீர்கள்..

இம்முறை நீங்கள் போனதும் பாப்பா பள்ளிக்குச் செல்லவில்லை. அவளால் முடியவில்லை. மனநலம் காரணமாக உடல்நலம் கெட்டது. விடுப்பு என்பதே இத்தனை வருட கல்விகாலங்களில் எடுத்தறியாத நானும் ஒரு நாள் விடுப்பு எடுத்தேன்..காரணம் உடல்நலத்தைக் கெடுத்த மனநலம்..எனக்கே புரிந்தது..சில சமயங்களில் சிலவற்றை நாம் தவிர்க்க முடிவதில்லை. நாம் அதிக புத்திசாலிகளாக இருந்தாலும் அதே தான் நடந்தது.

பிள்ளைகள் எங்களை விட நீங்கள் செய்யும் குறும்புகள், தண்ணீர் பிடித்து விளையாடுவதிலிருந்து, அனைத்தையும் ரசிக்கிறேன் அம்மா...இன்னும் விளையாட்டுத் தனத்தை விடாத அம்மா...இப்போது நான் கேட்பது விளையாட்டில்லை...

பாப்பாவிற்கு காலை நான்கு மணிக்கு நான் கல்லூரி கிளம்பும் முன் தலை சீவி விடுகிறேன்..அவளோ மாலை நான் வருவதற்குள் சமைத்து பாத்திரம் தேய்த்து வைக்கிறாள்..நீங்கள் வந்தாலும் செய்கிறோம் அம்மா..வாருங்கள்..உங்கள் அண்மை மட்டுமே போதும்..நேற்றெல்லாம் உங்கள் தலையணையில் உங்கள் நைட்டியை மாட்டி பாப்பா அதனை பக்கத்தில் போட்டுப் படுத்த போதும், நான் உங்கள் புடவையை தரையில் விரித்துப் படுத்த போதும் உணர்ந்தோம் உங்கள் மடியில் படுப்பதாகவே..ஆனால் அதுவே நிரந்தரம் என்றால்.....????

பொருளாதாரத்தால் நாம் இப்போது பொசுங்கிப் போன நிலையிலும் நான் அழைக்கிறேன் என்றால்...

என் பிரியத்திற்குரிய அம்மா..உங்கள் படிப்புக்கும் திறமைக்கும் இங்கும் வேலைகள் நிறையக் கிடைக்கும். அரசு வேலை..நிரந்தரம், பணம் ,பொருளாதாரம், சொந்த ஊர் என்று வசனம் மட்டும் சொல்லி விடாதீர்கள் அம்மா...

கலங்கிய கண்களுடனும்...கனத்த இதயத்துடனும்

உங்கள் தலை மகள்...சக்தி..

( பின் குறிப்பு...எப்போதும் சிரிப்பேன் அம்மா...நான் சிரிக்க வில்லை எனில் உங்களிடமிருந்து நான் இதனைக் கூட கற்றுக் கொள்ளவில்லை என்றே ஆகும்..எனவே சிரிப்பேன்..சிரிப்பேன்...ஒரு நீண்ட நெடிய பெருமூச்சுடன்)))



Saturday 12 December 2015

வெட்கித் தலை குனிகிறேன்...பெருமையுடன் கர்வமாய் நிமிர்கிறேன்

வெட்கித் தலை குனிகிறேன்..பெருமையுடன் கர்வமாய் நிமிர்கிறேன் என்ற தலைப்பைப் படித்ததும் உங்களுக்கு சத்தியமாய் தலை சுற்றியிருக்கும். அல்லது என்னை பைத்தியம் என்று நினைத்திருப்பீர்கள்...கேளுங்கள்

வெட்கித் தலை குனிகிறேன்
******************************

நம் நாட்டில் தான் இருந்தது நாளந்தா பல்கலைக்கழகம்..இங்கே வானியல், இயற்பியல், வேதியல், சமூகவியல், உளவியல்,விலங்கியல், என்று அனைத்து வகையான இயல்கள் என்று மொத்தம் 118 வகைப் பாடங்கள் இருந்ததாகவும் அன்றைய நாளில் நாம் அனைத்து வகையிலும் சிறந்த மனிதர்களாக வாழ்ந்ததாகவும் பிற்காலம் வந்த பல்வேறு படையெடுப்புகளால் அவைகள் அழிந்ததாகவும் படிக்கிறேன்..அப்படி பட்ட முன்னோருக்கு பிறந்தவர்கள் தான் நாமா?

சிபி என்று சக்கரவர்த்தி இருந்தான். இவன் புறாவிற்கு தன் தொடைக்கறியைத்தந்தானாம்.
 இப்படியாக, பாரி, காரி, அரிச்சந்திரன், ராமன், என்றும் பல்வேறு அகிம்சைக் கதைகள் அன்புகதைகள், உண்மை பேசும் கதைகள்

எல்லாம் படித்து வளர்ந்தவள் பேசுகிறேன் , கேளுங்கள்,

வரும் முன் காப்போம் என்பது தானே நமது கோட்பாடு..ஆனால் இவ்வளவு இடர்கள் வந்த பின்னே அவர்கள் உதவினார்கள், இவர்கள் கொடுத்தார்கள் என்று பேசியும் செய்தும் வருவதில் எவ்வளவு இழப்புகள்??எவ்வளவு போராட்டங்கள்??எவ்வளவு தடுமாற்றங்கள்? எவ்வளவு உளவியல் போராட்டங்கள்?

ஹாங்காங் சூறாவளியால் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும். அங்கே ஒரு மணிநேரத்திற்கு நூறு கிலோமீட்டர் வேகத்துடன் காற்று வீசும் ஆனால் அங்கேயுள்ள கட்டிடங்கள் அதனைத் தாங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளன.

பூமியில் மனிதன் வாழத் தொடங்கியது முதல் பல்வேறு இழிவுகள், அழிவுகள், இழப்புகள் சந்தித்துள்ளது ஆனால், இப்போது சந்தித்திருக்கும் அழிவுகள்???

அன்றைய தினத்தின் இரவில் விடிய விடிய கொட்டும் மழையில் மொட்டை மாடியில்...நின்ற எல்லோருக்கும் தெரியும் உயிரின் வலியும் வேதனையும்..

மாடியிலிருந்தும் வழிந்த தண்ணீர், பூமியிலிருந்து இரண்டாவது மாடி வரை எட்டிய நீர்...

பூட்டிய வீடுகளுக்குள் தண்ணீரில் மிதந்த பிணங்கள்.

தனியார் மாணவர் விடுதியில் மிதந்த மாணவர்கள்...



இது எப்படி நடந்தது?

நகரத்தின் நீர் நிலைகளை அழித்தல், மோசமான கட்டமைப்புக்கும் அனுமதி அளித்தல், என்று நகரத்தின் திட்டமிடலில் அடிப்படையில் இருந்து பிழை...பிழை...சொன்னது மழை

அதுதான் தவறென்றால் ஒரே நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் 29,000 கன அடி தண்ணீரும் அடையாற்றில் 90,000 முதல் 1,00,000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது..அவர்களுக்கே தெரியவில்லை என்று மழுப்பப்பட்டாலும் போன உயிர் எப்ப்டி திரும்பி வரும்/

மூன்றாம் வகுப்பு படிக்கும் பையன் தன் தந்தை தாய் என்று எல்லோரையும் இழந்து வீதியில் நிற்கிறான். இப்போது அவனுக்கு எது வீடு என்று அடையாளம் காட்டக் கூடத் தெரியவில்லை. நாகரீகத்தையும் பழகும் முறையையும் பார்த்தால் படித்த வேலை பார்க்கும் பெற்றோருக்கு பிறந்தவனாய்த் தெரிந்தான்.

எச்சரிக்கை விடுக்கும் முன்பே மின்சாரம் இல்லை. எனவே தொலைக்காட்சி  செல்பேசி என்ற எந்தத் தகவல் தொடர்பும் இல்லை. மேல் கரையில் அறிவித்துவிட்டு கீழ்கரையில் அறிவிக்கும் முன்பு தண்ணீர் புகுந்தது,

உண்மையில் உயிர் பிழைத்தவர்கள் எல்லாம் மறு பிறப்பு என்று தான் சொல்ல வேண்டும்

பாலத்திற்கு அடியில் எத்தனை குழந்தைகளின் தலைகள்,? யாருமே கேட்க வரவில்லை என்றால் அவர்கள் சொந்தக்காரர்களும் போய்விட்டார்கள் என்று தானெ பொருள்??

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி 228 மட்டுமே நீர் இருப்பு ஆனால் அது ஒரே நாளில் 791 ஆக உயர்ந்தும் என்ன தான் செய்தார்கள்?

ஒரு அரசு நதி நீரை வீட்டு மனைகளாக்கி கொடுத்து இருக்கிரது. அடுத்து வந்த அரசு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறது. பிறகு தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர்,

சத்தியமாய் உங்கள் அரசியல்வாதிகளை, நான் குறை சொல்ல வில்லை. கட்சிகளையும் குறை சொல்ல வில்லை..செய்யாததைச் செய்ததாகவும், பாராட்டிக் கொண்டே இருங்கள் அவ்வளவு பக்தியையும் அவர்களிடம் காட்டிக் கொள்ளுங்கள்..

யார் யாரோ பிறந்து சிறந்து வளர்ந்த பூமியில் இத்தனை அதிகாரிகள், இத்தனை அலுவலர்கள் எல்லாம் படித்தவர்கள் தானே? என்ன செய்தீர்கள்? இந்த இடத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்கக்கூடாது என்றோ இத்தனை மாடி கட்டப்படக்கூடாது என்றோ ஏன் சொல்ல வில்லை? கேட்கவில்லை? செயல் படவில்லை?

எங்கிருக்கிறது உங்கள் சிக்கல்?எந்த சட்டங்களைப் பின்பற்றினார்கள்?ஒருவருமே ஒரு வார்த்தையும் கேட்கத் தோன்றவில்லையா? துணிவில்லையா?

இப்போது உங்களை வணங்கி உங்கள் பாதையில் நடப்பதா? மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்ந்து விடு பாப்பா என்று உமிழ்வதா? அல்லது வெட்கித் தலை குனிவதா?

உங்கள் முன்னோர்கள் என்று சொல்ல ஒரு நெடிய கதை இருக்கிறது. ஆனால் எங்களுக்கு நீங்களா முன்னோடிகள்? உங்களையா நான் எனக்குப் பின்னான தலைமுறைகளுக்குச் சொல்லிக் கொடுப்பேன்?

அதோடு உதவி செய்ய வந்த பலர் தங்கள் முகநூலில் போட்டுக் கொள்வதற்கு புகைப்படம் எடுத்துக் கொண்டீர்களே? அடடா? ஆவணம் முக்கியம் அய்யா.

சோகமாய் கிடக்கும் பெண்கள் , பரிதவிக்கும் பெண்கள் என்ற தலைப்பில் நீங்கள் போட்டுக் கொண்ட புகைப்படங்கள் அடடா..உங்களுக்கு ஆஸ்கர் அல்லது அதனை விட உயரிய விருதுகள் தரும் தான்..

********************************************

பெருமையுடன் கர்வமாய் நிமிர்ந்தேன்
****************************

ஏதேதோ ஊர்களில் இருந்து வந்தார்கள் துப்புரவுத் தொழிலாளர்கள், சாலைகளை சரி செய்ய.ஒரு தாசில் தார் ரோடு கூட்டுகிறார்.

ஒரு இளைஞன் , எந்த வழிசல்களும் இல்லாமல் பல பெண்களுக்கு உதவுகிறான்.

இஸ்லாமியர், ஜெயின், கிறித்தவர் என்று ஒருவருக்கு ஒருவர் பல உதவிகள்..

வீட்டில் ஒரு பொருளும் இல்லாமல் மழை அடித்துப் போனது என்ற போது மாற்றுக்குத் துணியில்லாமல் ஈர உடையோடு இருந்த போது, புதிய ஆடைகள் வழங்கிய உள்ளங்கள்,

மாவட்டம் எல்லாம் பார்க்காமல் வேறு வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்

குறிப்பார் எங்கே மின் கம்பங்கள் சாய்ந்து அதன் ஒயர்களெல்லாம் அறுந்து தொங்கிய போதும் கவனமாய்  பிரித்து மீண்டும் மின்சாரம் வர உதவிய மின்சாரத் துறை ஊழியர்கள்

திரைப்படங்களில் ஒரு தோசைக்குக் கூட தன் கம்பீரத்தை விற்கும் காவலர்கள் செய்த சேவைகள்..

எல்லோருக்கும் நீங்களும் சொல்லுங்கள் உங்களின் நெஞ்சத்தின் ஈரத்தால் ஒரு வீர வணக்கம்..

அவர்களுக்காக பெருமைப் படுகிறேன்..

அதோடு இவ்வளவு பேரழிவு நடந்து என் தந்தையோடு தொடர்பு கொள்ள இயலாமல் தவித்த பொழுதுகள் தந்த ரணம், அப்பா நாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்று நாங்கள் மௌனமாக அலறிய பொழுதுகள்

யாரோ ஒரு அம்மாவுக்கு தன் பிள்ளைகளைக் காணோம்..பிள்ளைகளுக்குத் தன் அம்மாவை அப்பாவைக் காணோம்..

எல்லாம் பொருட்களோடு பொருட்களாய் போய் செர்ந்தார்கள் என்று அறியும் வயதா இது?

இன்னும் நான் பெருமை கொள்ள இருக்கிறது என் அன்பின் சுடர்களே

அது

இவ்வளவு சூழலில் இருக்கிறோம் என்ற பின்னும் எங்கள் அப்பா கடலூருக்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவியது,

ஒவ்வொரு வருடமும் தன் பிறந்த நாள் மட்டும் அல்லாது தனக்கு அம்மா கொடுக்கும் காசெல்லாம் சேர்த்து வைத்து எந்த புகைப்படமும் எடுத்துக் கொள்ளாமல் முகநூலிலும் வெளியிடாமல்ஏழைச் சிறுவர்களுக்கு கல்விக்கு  உதவும் என் தங்கை..

நாங்கள் இரண்டு நாட்களாய் பட்டினி கிடந்த போதும், உதவிப் பொருட்கள் வந்து தந்த போதும், இல்லையம்மா..இது நமக்கானது இல்லை, நாம் வாங்கக் கூடாது, ஏனெனில் நான் வேலை பார்க்கிறேன்..அதற்கு மாதாமாதம் ஊதியம் வருகிறது அதில் தான் நாம் சாப்பிட வேண்டும் இது இல்லாதவர்களுக்காக : ;நமக்கு வேண்டாம் என்று மறுதலித்த என் அம்மா..

( இரண்டு நாட்களாய் மீட்புப் பணிக்கு மருத்துவமனைப் பணிகளுக்கும் உதவிகள் செய்ய சென்று விட்டார்)

மின் இணைப்பு வந்த பிறகு எங்களை அன்போடு விசாரித்த நல் உள்ளங்கள்..அடடா...நான் ஒரு தேவ உலகத்தில் இருக்கிறேன் என்று சொல்ல வைத்த பொழுதுகள்..

இன்னும் திடம் கொண்டிருக்கிறேன்..

இனியும் நான் எப்படிப் பொறுப்பது??

என் வேலை என்ன என்று தெரிந்து விட்டது. படித்து அதன் மூலம் வேலை பெற்று என் வருமானத்தில் பாதியை மட்டுமே என் குடும்ப செலவிற்கு மீதி 50 சத்வீதம் படிக்கும் குழந்தைகளுக்கு. மருத்துவத்திற்கு, இல்லாதோருக்கு என்று செலவிடப் போகிறேன். நிச்சயம் என் குடும்பம் அதை ஏற்கும். போன பொழுகள் போகட்டும் இனி வரும் காலமெல்லாம் என்னால் முடிந்த அளவுக்கு பணி புரியப் போகிறேன்.

அந்த நாளில் என் சமூகமே தலை நிமிரும்...நாங்கள் சூரியத் தோரணங்கள் தான்..


Monday 16 November 2015

தண்ணீரில் தத்தளித்து

தீபாவளி முதலே மழை மிகத் தீவிரமாக பெய்யத்தொடங்கிவிட்டது. வெள்ளி வரைக்கும் கல்லூரி இருந்தது. சனிக் கிழமை மழையின் தீவிரம் அதிகமானதால் விடுமுறை என்று அறிவித்து விட்டார்கள். என் போன்றவர்கள் பெருத்த கவலையில் ஆழ்ந்து விட்டோம். அண்ணா பல்கலைக் கழகக் கலந்தாய்வு மிகவும் தாமதமாக நடந்ததாலும் கடைசி வரை எங்கள் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து கொண்டே இருந்ததாலும் செப்டம்பர் மாதம் தான் பாடங்கள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டன.  இரண்டு மதிப்பீட்டுத் தேர்வு முடிந்திருந்த நிலையில் மூன்றாவது நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பல்கலைக்கழகத் தேர்வு...இந்தத் தேர்வை நான் மிகவும் ஆசையாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் மழையின் கோரத்தாண்டவம்...

நாங்கள் வசிக்கும் பகுதியானவேளச்சேரி....ஏரி...எங்கள் வீடு எல்லாம் ஏரியைச் சேர்ந்தது தான் என்று நான் கேள்விப்பட்ட போது அதிர்ச்சியானேன்.

பால் , காய்கறி என்று எந்த உணவுப் பொருளும் கிடைக்க வில்லை.

ஆனால் அருகாமையில் இருந்த கடைகளில் அன்று பாலின் விலை 20 ரூபாய் ஆவின் நைஸ் விலை 40, உருளைக்கிழங்கு ரூபாய் 58, முட்டைக் கோஸ் ஒன்றின் விலை 55, கேரட் 78, பீட்ரூட்80, தக்காளி 140, கீரை சாதாரணமாக ரூபாய் 15 அல்லது 10க்குக் கிடைக்கும் அன்று 40. கேட்கவே உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்

மழையில் சாலை வழியாக பயணமான வண்டிகளில் சில சாலை பள்ளங்களில் தடுமாறி விழுந்தனர். அவர்களைத் தூக்கி விட்டு வண்டியை எடுத்துத் தந்து 300 முதல் 500 வரை பணம் பெற்றனர்.

அரசியல் வாதிகள் தான் மக்களை ஏமாற்றுவார்கள் என்ற என்எண்ணத்தில் தீ இல்லை. எரிமலையே வெடித்தது.அன்று தான். ஆளாளுக்கு என்னென்ன வழிகளில் பணம் சம்பாதிக்க முடியுமோ அந்த வழிகளில் பணம் சம்பாதித்தனர்.

இன்னும் நான் சொன்னால், இப்படியெல்லாமா நடந்தது என்று நீங்கள் உங்கள் மூக்கில் மட்டுமல்ல , பக்கத்து வீட்டுக்காரர் மூக்கின் மேலும் விரல் வைப்பீர்கள்

மூன்று நாட்களாய் மின்சாரம் இல்லை. எனவே எங்கள் செல்பேசி இணைப்புகளில் இருந்த சார்ஜ் முற்றிலுமாகக் கரைந்தது. பவர் பேங்க் என்று சொல்லப்படும் சார்ஜர்களில் சார்ஜ் ஏற்றி, அதனை 50க்கும் 100க்கும் விற்றனர். மக்களும் வெளியூர்களில் வசிக்கும் தங்கள் குடும்பத்தாரோடு பேச அதனை விலைக் கொடுத்து வாங்கி உபயோகித்தனர்.

உதவி என்று இருக்கும் செயல்கள் அனைத்தும் அன்று வியாபாரமாக்கப்பட்டது கண்டு எனக்குத் தலை சுற்றியது.

தரை தளத்தில் இருந்தோர் ஒரு சிலர் காலி பண்ணி பாதுகாப்பு இடங்களுக்குச் சென்றனர். அப்படி பாதுகாப்பு கருதி வேறு வீட்டுக்குச் சென்றவர்களின்  வீடு பக்கத்தில் இருந்தவர்கள், தங்கள் வீட்டிலிருந்து தண்ணியை அடுத்தவர்கள் சுற்றுச் சுவர்களுக்குள் கொட்டினர். ( இதை பக்கத்து வீடுகளில் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.)

வழக்கம் போல் மீன் பிடிக்கும் சிறுவன் மனம் கொண்ட பெரியவர்கள் தங்கள் குழம்புகள் கொதிக்க வைக்க மீன்பிடித்து விளையாடினர்.( கொண்டாடினர்.)

யாரும் யாருக்கும் அடிப்படையில் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வில்லை என்பதே என் கணிப்பாக இருந்தது.

பெரிய மலைப்பாகவும் வியப்பாகவும் இருந்தது. எல்லாவற்றையும் வியாபாரமாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தவர்கள் யார்? கற்றவர்கள் யார்? எனக்கு அழுகை வந்தது. என் மக்கள் இப்படி இருப்பது என்னால் தாங்க இயலவில்லை. இந்தப் பதினேழு வயதில் என்னால் என்ன செய்ய இயலும் என்ற இயலாமையில் தவித்தேன். இது தண்ணீரில் தத்தளித்த மக்களை விட என் மனது தத்தளித்த சோகம் தான் அதிகம்..

அரசு தான் இந்தப் பகுதியை நிலமாக்கி விற்றுள்ளது. பின்நாளில் கரையோரம் மிகவும் குறுகலாக்கப்பட்டுள்ளது குடிசை போட்ட மக்களால். அவர்களும் பட்டா போட்ட பிறகு விற்று இருக்கின்றனர்.


( இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்நேரம் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்துக் கொண்டுள்ளார்கள்..மின்சாரம் அரை மணிநேரம் மட்டும் தரப்படும் என்று சொல்லி, சரியான பின் முழுவதுமாக தரப்படும் என்று சொல்லிச் சென்றுள்ளனர்..ஆனால் பால் விலை 30 ரூபாயாகக் குறைந்தது. காய்கறி விலை அதே தான்...)

எல்லோரும் தப்பு பண்ணா அரசாங்கத்துக் கிட்ட சொல்லணும்...அது சரி..

அரசாங்கமே தப்பு பண்ணா??????!!!!!!

( நான் போட்டுள்ள ஆச்சர்யக் குறியும் கேள்விக்குறியும் கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் போடும் ஆச்சர்யக்குறி அல்ல)


யார் மாற வேண்டும்?
*************************************************************************
Image result for சென்னை வெள்ளம்Image result for சென்னை வெள்ளம்Image result for சென்னை வெள்ளம்Image result for சென்னை வெள்ளம்

Friday 13 November 2015

கடவுளைக் கண்டேன்

1. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்..என்ற வள்ளுவரின் குறள் உண்மையாக வேண்டும். வங்கியில் கிரடிட் ,டெபிட் கார்டுகள் இவர்களுக்கு முதன்மையாக வழங்கப்பட்டு, நாட்டின் முதல் தரத்தில் இவர்கள் வைக்கப் பட வேண்டும்.இவர்களுக்கே வங்கிக்கடன்,போக்குவரத்து இலவசம் என்று அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்...( போலி விவசாயிகள் இருந்தால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 20வருடம் சிறை தண்டனை)



2. முதல் வகுப்பிலிருந்தே சட்டத்தின் அனைத்து நுணுக்கங்களும் கற்பிக்கப்பட வேண்டும்.

3. மாநிலத்தின் மொழிகள் கட்டாயமாக கற்றிருத்தல் வேண்டும்.

4. குறிப்பிட்ட இலக்குக்கு மேல் சொத்து உள்ளவர்களின் உபரி வருமானத்தை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்.( ஒருவர் இத்தனை கோடி தான் சொத்து வைத்து இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து விட வேண்டும்.)

5. அனைத்துப் பணிகளும் அரசுடமையாக்கப் பட வேண்டும். (அமைச்சர், ஆட்சியர்,அலுவலர் என்று எந்த பாகுபடும் இல்லாமல் அவரவர் வேலைக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்)

6. பெண்களுக்கு எதிரான வன்முறை செய்பவர்கள் யாராக இருந்தாலும் நாடு கடத்தப்பட்டு விடுமுறை அற்ற வேலை பார்க்க வைக்க வேண்டும்.

7. நமது நாட்டு உணவுகளின் மேன்மைகளை எடுத்துரைத்து, நம் மக்கள் நம் உணவுகளை மட்டும் உண்ண வைக்க வேண்டும் ( உதாரணம் பாதாம் பருப்பு விடுத்து கடலை..ஓட்ஸ் விடுத்து கேழ்வரகு..கோக்,பெப்ஸிக்கு பதில் இளநீர்,பதநீர்)

8. அறிவியல், நிலவியல், கணினி, மருத்துவம், விஞ்ஞானம் என்று அனைத்துத் துறைகளும் 2020 க்குள் அதன் உச்ச நிலையை அடைந்திருக்க வேண்டும்.



9.கல்லூரி மாணவர் என்ற பருவத்திற்கு வந்த பிறகு வாரத்தின் இறுதியில் நாட்டுக்கு என்ன வேலை செய்ய முடியுமோ அதனை செய்து தர வேண்டும்...(இதனை கட்டாயப் பணியாக்க வேண்டும்)

10 இந்திய ரூபாயின் ஒரு ரூபாய்க்கு 100 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இந்தியாவின் ரூபாய் மதிப்பு உயரணும்

********************************************************************************

கனவு காணுங்கள் என்றார்...எங்கள் விடிவெள்ளி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்...அதைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் வேலை பார்த்தால் கடவுளைக் கண்டேன்...

நானே நினைக்க வில்லை. நல்ல திட்டங்கள் என் மனதில் எழுந்து கொண்டே இருந்தது..நன்றி என்னை இணைத்த அப்பாவிற்கு( வாய்ப்பு வழங்கிய கில்லர்ஜி அங்கிளுக்கும்)

*********************************************************

1.http://vishcornelius.blogspot.com/2015/11/blog-post_12.html

2.http://www.gunathamizh.com/2015/11/05112015.html

3.http://bharathinagendra.blogspot.in/

4.http://sooryanilaa.blogspot.in/

5.http://naachiyaar.blogspot.in/

6.http://kavipriyanletters.blogspot.com/

7.http://isaikarukkal.blogspot.in/

8.http://sunshinesignatures.blogspot.in/

9.http://piriyasaki.blogspot.in/

10.http://chollukireen.com/

*********************************************************************************

 மழைக்கென விடுமுறை விட்டிருந்தாலும் பாடங்கள் நிறைய இருந்ததால் இவ்வளவு நேரம் ஆகிவிட்டது..( மன்னிக்க கில்லர்ஜி அங்கிள்)

Tuesday 3 November 2015

அப்பவே சொன்னாங்க...

வணக்கம்ங்க..

எல்லா சினிமாவுலயும் காலேஜ்னா சும்மா ஒரே ஒரு நோட்டு மட்டும் தூக்கிப்போறது, அடுத்த பெண்களைப் பாத்து கமெண்ட் பண்றது. எப்பப் பார்த்தாலும் ஒரு கட்டை சுவத்துல உக்காந்துகிட்டு பேசி சிரிக்கிறது, கிளாஸ் கட் அடிக்கிரதுன்னு காண்பிப்பாங்க.

பத்தாம் வகுப்பு படிக்கிறப்ப, சரி இன்னும் ரெண்டு வருஷம் தானேனு நினைச்சு நானும் படிச்சு, நல்ல மார்க்( அப்படி தான் நம்புறேன்...) எடுத்து நல்ல பிள்ளைனும் பேர் வாங்கி வெளில வந்துட்டேன்.

நான் ஐ.ஏ.எஸ். படிக்கணும்னு சொன்னேன். அப்படின்னா, ஏதாவது இளங்கலை பட்டம் வாங்கினா போதும் பி.பி.ஏ. அல்லது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படினு அம்மா சொன்னாங்க... நானோ நீண்ட காலமா நாம பி.இ. கம்ப்பூட்டர் சயின்ஸ் தான் படிக்கணும்னு நினைச்சுருந்தேன்...

ஒரு வேளை இதைப் படிக்க வைக்க அம்மா அப்பாட்ட காசு இல்லையோனு பயந்து நான் சொன்னேன். இல்லைடா இது படி எளிமையா இருக்கும்னு சொல்லவும், நான் விடாப் பிடியா, சென்னைல தான் படிப்பேன். அதுவும் பி.இ. கம்ப்ய்ய்ட்டர் சயின்ஸ் தான் படிப்பேன்னும் அடம் பிடிச்சு சென்னை கூட்டி வந்துட்டேன்.

நடு நடுவுல ஏன் பொம்பளைப் பிள்ளைகளப் படிக்க வைக்க மாட்டீங்களா? எங்களுக்கு மட்டும் என்ன சாதாரணப் படிப்பா? நாங்க நினைச்ச படிப்ப படிக்ககூடாதானு அப்போப்ப வசன்ம் எல்லாம் பேசினேன்.(நடு நடுவில மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்குங்க)

என் சார்பா பேச எங்க பிரின்ஸிபால் மிஸ்ஸையெ தயார் பண்ணேன். பாக்குறப்பல்லாம் சோகமா முகத்தை வச்சுகிட்டு எங்கம்மா என்னை ஆர்ட்ஸ் படினு சொல்லிட்டாங்கன்னு வேற போட்டுக் கொடுத்தேன். அம்மாவோட தோழியான பிரின்ஸியும் ஏங்க நீங்க படிச்சவங்க, இவ்ளோ நல்லாப் படிக்கிர பிள்ளைய இப்படி பண்ணலாமா? உங்களுக்குப் பணத்தட்டுப்பாடுன்னா, நான் ஏதாவது, ரோட்டரி கிளப் போல ஏதாவது அரேன்ஜ் பண்ணவான்னு கேட்க, ஓ இல்லை. அவள் என்ன வேண்டுமானாலும் படிக்கட்டும்னு சொல்லி அம்மா உடனே சென்னையில் இருக்கும் தன் நட்பு வட்டங்களுக்கு தொடர்பு கொண்டு நான் இந்த கல்லூரில சேர்ந்துட்டேன். இது தான் நான் காலேஜ் சேர்ந்த கதை.

இவ்ளோ நாள் ராப்பகலா தூக்கம் முழிச்சுப் படிச்சாச்சு. இனி லைப்ரரி போய் ஜாலியா படிக்கலாம், நினைச்சா சினிமா போகலாம். அரட்டை அடிக்கலாம் என்று பல வாறு என் எண்ண ஓட்டங்கள் ஓட்டப் பந்தய வீரரை விட வேகமா ஓடிச்சு.

இதற்கிடையில் பல காலேஜ் பசங்க படிக்கிற படங்கள் எல்லாத்தையும் கதை கேட்டு சில படங்கள் பாத்து, ராகிங் இருக்கும், அது இது என்று பயந்ததோடு எதற்கும் கலங்காதிரு மனமே நு என்னை நானே தேத் தி தைரிய லட்சுமி யா ஆக்கி வைச்சிருந்தேன்.

காலேஜ் போன முதல் எங்களுக்கு நல்ல விருந்து சாப்பாடு போட்டாங்க. பல பேர் வந்து பேசினாங்க. அந்த காலேஜ் பத்தி நிஜமான கதைகள் கொஞ்சமும் நல்லவிதமாக சொல்லப்பட்ட ஆனால் நம்பவே இயலாத தெரிந்தவைகளுமாக எங்களுக்குச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

மறு நாள்லேர்ந்து ஜாலி நினைச்சுப் போன முதல் வகுப்பிலேயே பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க...அய்யோ????? இதென்ன அநியாயம்...அதோடு மட்டும் இல்லை. சீனியர்களுக்கும் வகுப்பு நடந்தது. யாரும் கட்டை சுவத்துல உட்காரலை. ஆனா பல கட்டை சுவர்கள் காலியாகவே இருந்தது. இருந்தாலும் பல  கட்டை சுவர்கள் , மற்றும் காம்பவுண்டு சுவர்கள் பற்றி நான் விவரம் கேட்க, ஏய் நீ கம்ப்யூட்டர் சயின்ஸ் தானே எடுத்த? பிறகு ஏன் சிவில் பத்தி கவலைப் படுறனு எல்லாரும் என்னையத் தான் ஒரு மாதிரி கேலியாப் பாத்தாங்க.

ராகிங் கூட இல்லையா...இது எனக்கு அதிர்ச்சி...அக்காக்கள்,,,அண்ணாக்கள் யாரும் உங்களை பேர் கேட்டாக்கூட நீங்கள் எங்களிடம் சொல்லலாம். உடனே அவர்களை சஸ்பெண்ட் பண்ணிடுவோம்னு வேற சொல்லிட்டாங்க...அந்த அக்காக்களும் அண்ணாக்களும் எங்களிடம் தங்கள் குடும்ப உறுப்பினரைப் போல நினைத்து பழகுறது அதைவிட பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு..

அதோட பெரிய அதிர்ச்சி தினமும் வகுப்பு ஒரு பிரிவேளை கூட இடைவேளை விடாமல் நடந்தது. ஒரு ஆசிரியர் போய் மற்ற ஆசிரியர் வருவதற்குள் ஒரு தண்ணி கூட குடிக்க முடியலை. நான் மாணவர்கள் யாரும் தம் அடிக்க போவார்கள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

பெரிய அதிர்ச்சி என்னான்னா, போன 20 நாள்ல தேர்வு வச்சுட்டாங்க. அது முடிஞ்சு சும்மா இருக்க முடியலை, அசைன்மெண்ட், பிராஜெக்ட், அஸெஸ்மெண்ட். அப்படினு இன்னும் உட்காரக் கூட முடியலை. பிளஸ்டூ அப்புறம் ரொம்ப ஜாலியா இருக்கும் எப்ப பார்த்தாலும் கதை புத்தகமும் வேறு வேறு புத்தகங்கள் படிக்கலாம் நு நினைச்சிருந்த என்னை இந்த கல்லூரி வாழ்க்கை அப்படியே மாத்தி போட்டுடுச்சு.

(எவ்வளவு அப்பாவியா வாழ்ந்திருக்கேன் ....)

சேர்ந்த முதல் வருஷம் முதல் அஸஸ்மெண்ட் லேயே முதல் இடம் மகிழ்ச்சியா இருக்கு....நான் நல்லாப் படிப்பேன்...ஆனால் ஏங்க பின்ன எல்லாப்படத்துலேயும் காலேஜ்னா வேலையில்லாதவங்க மாதிரியே காட்டுறாங்க...என்னைத் துளைத்தெடுக்கும் கேள்வி இது...உங்களுக்குத் தெரிந்தால் பதில் சொல்லுங்கள்...



Friday 2 October 2015

திருவிழாவாம் திருவிழா


Image result for pudukkottai images


திருவிழாவாம்...திருவிழா
பதிவர்களின் திருவிழா

புதுக்கோட்டையில் ஒருவிழா
பூப்பூக்கும் பெருவிழா

பதிவர் சேரும் ஒருவிழா
பாசம் உள்ள நம்விழா

வலை தளங்கள் இயக்குவோர்
வருகை தரும் பெரும் விழா

பதின்னொன்று வாருங்கள்
பண்பாடு சிறக்கட்டும்

அக்டோபர் வாருங்கள்
அன்பு கூடி பெருகிடும்

கணினியிலே புரட்சியாம்
காண ஓடி வாருங்கள்

கலைஞர்கள் கூடிடும்
கண்ணான ஒரு விழா

இங்கே ஓடி வாருங்கள்
பங்கு பொட்டுப் படிக்கலாம்

நிலவன் அய்யா இருக்கிறார்
நீங்கள் ஓடி வாருங்கள்

கரந்தைமாமா அழைக்கிறார்
காணஓடி வாருங்கள்

தனபாலன். கூப்பிட
தயக்கமின்றி வாருங்கள்

அழகான ஒரு விழா
அன்பு காட்டும் பெருவிழா

நமது வீரம் காட்டுவோம்
நாளும் இதனைக் கூட்டுவோம்

வருக வருக வருகவே
சக்தி பாப்பா அழைக்கிறார்

*********************************************************************************
( சின்னப்பிள்ளையில் படித்த மாம்பழமாம் மாம்பழம் பாட்டு மெட்டில் படியுங்கள்...என்ன இது சின்னப் புள்ளத் தனமா இருக்கு என்று நீங்கள் சொன்னால்?????????

நான் சின்ன புள்ள தாங்க சின்னப் புள்ளத் தனமா தான் கூப்புடுவேன்...)


அய்...நானும் எழுதிட்டே....நானும் எழுதிட்டேன்...நானும் எழுதிட்டேன்...

நானும் தாதா தான்..நானும் தாதா தான்....ஹா.....ஹா....

அழகிய ஏரி


Tuesday 29 September 2015

உழவுத் தொழில் காப்போம்

இது எனது சொந்தப்படைப்பு.  இதற்கு முன் வெளியாக வில்லை. வேறெங்கும் வெளியிடவில்லை.வலைபதிவர் திருவிழா மற்றும் தமிழ் இணையம் நடத்தும் போட்டிக்காக எழுதப்பட்டது

உழவுத் தொழில் காப்போம்
********************************

உழுதுண்டு வாழ்வார்
எனப்போற்றினார் திருவள்ளுவர்
ஆனால் இன்று
உழுதவர் அழுதவர் ஆகின்றார்
நிலங்கள் நிறமற்றுக் கிடக்கின்றன
வயல்கள் தம் வாசம் இழந்ததோடு
வாசம் இழந்து போயின
காங்கீரிட் காடுகளாய் வீடுகள் முளைத்து
விளை நிலங்கள் வீண் நிலங்களாயின
மழை வேண்டி தவம் செய்கிறோம்
ஆனால்
மரம் நட்டு பாதுகாத்தோமா??
வினை செய்தவன்
வினையே தான் அறுப்பான்
மரத்திற்கு மரண தண்டனை கொடுக்கிறீர்கள்
அதனால்
பூமிதாய் கோபம் கொண்டு
நீர் தராமல்\வற்றினாள்
உரம் கலந்தீர்கள்
எனவே தான் ரசாயனக் கலவையோடு
விளைகின்றன பயிர்கள்
இன்னும் என்ன வேண்டும்
தன் தோற்றம் இழந்தது
பல தோட்டங்கள்
ஆனாலும்

மனிதர்கள் இன்னும்
உணரவில்லையே
இயற்கை என்றும் நமக்கு
இறைமை தரும்
இறைமை என்றும்
வளமை தரும்
வளமை மட்டுமே
வாழ்வு தரும்
வாழ்வில் உயர்வு பெறவே
 நிலம் காப்போம்
பூமி காப்போம்
மரம் வளர்ப்போம்
இயற்கை நேசிப்போம்
*************************************



ஐயா , இது எனது சொந்தப் படைப்பே தான் அய்யா> இதற்கு முன் நான் பச்சை பாலகனாக இருந்தேன் அய்யா அதனால் இதனை வெளியிட வாய்ப்பே இல்லை. மேலும் இதனை யாரும் அம்பது காசுக்குக் கூட வாங்க மாட்டாங்க அய்யா எனவே நான் யாருக்கும் தருவதில்லை என பகிரங்கமாக உறுதி மொழி தருகிறேன் அய்ய்யா...

.பரிசு நீங்கள் பணமாக, பொருளாக, என் கல்லூரியின் கட்டணமாக எப்படிக் கொடுத்தாலும் உடனே அங்கீகரித்து விடுவேன் அய்யா...ஒண்ணுமே தர இஷ்டம் இல்லைனாலும் கொஞ்சூண்டு வாழ்த்தாவது தாங்கய்யா...

.அப்புறம் உங்களுக்கு விழாக் கால சலுகையாக ( நான் பிறந்த மண் புதுக்கோட்டையில் விழா நடப்பதால் மட்டுமே உங்களுக்கு இச்சலுகை வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்) எனக்குத் தரும்தொகை பெரிதாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு தவணைத் திட்டத்தினையும் புதிதாக அறிமுகப் படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்....

இச்சலுகையை அனைவரும் பயன்படுத்தி பலன் பெறுமாறு உங்களை அன்புடன் வேண்டுவது
நல்ல பிள்ளை மற்றும் அப்பாவிப் பிள்ளை சக்தி

Sunday 27 September 2015

பெண் உரிமைகளும் உதாசீனங்களும்

பெண் உரிமைகளும் உதாசீனங்களும் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது


வகை மூன்று பெண்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரைப் போட்டி

***************************************************************

பெயர்:செ.சக்தி
வயது:17
கல்வித்தகுதி:B.E.(I year)
முகவரி:சென்னை..600042
*****************************************

பெண் உரிமைகளும் உதாசீனங்களும்
******************************************

     பூத்துக்குலுங்கும் பூந்தோட்டத்துடன் மட்டுமே பெண்களை ஒப்பிடும் இந்த உலகில் பெண்களை பெருந்தெய்வமாக பாவிக்கும் ஒரு சிலர் மட்டுமே பெண்ணியம் பேசுகிறோம்.இல்லை பேசிக் கொண்டு மட்டுமே இருக்கிறோம்.

   மேல் நாட்டில் ஒரு வழக்கு உண்டு WHAT EXIST FOR MAN IS DEMANDED FOR WOMEN.. அதாவது சராசரியாக ஒரு ஆணுக்கு கிடைக்கும் உரிமை பெண்ணுக்கு கிடைக்கவேண்டுமானால் மிகப்பெரிய போராட்டமே நடத்தப் பட வேண்டும்.

சமீபத்தில் ஒரு வழக்குக்குக் கிடைத்த தீர்ப்பை படித்துவிட்டு பெண்ணுரிமை பேசவே பயமாக உள்ளது அந்தத் தீர்ப்பு கூறுவது இதைத்தான், கணவனிடமிருந்து ஜீவனாம்சம் வாங்கும் ஒரு பெண் உடலுறவே வைத்துக் கொள்ளக்கூடாது . ஒரு பெண்ணின் சராசரி உணர்வைக் கூட சட்டத்தாலும், இது போன்ற தீர்ப்புகளாலும் கட்டிப் போட நினைக்கும் இந்த சமூகத்தில் பெண் உரிமக்காக அல்ல, பெண் ஒரு மனிதப்பிறப்பு என்று நிருபிப்பதற்கே போராட வேண்டும் போல .

 ஒரு பதினெட்டு வயதுப் பெண் ஒன்பது மணிக்கு  பக்கத்தில் உள்ள பெட்டிக்கடைக்குப் போக வேண்டும் என்றால் கூட அவளது ஐந்து வயது தம்பியைத் துணைக்கு அனுப்புகிறார்கள். பையனாகப் பிறந்ததாலேயே அவன் ஐந்து வயதிலேயே வீரனாகவும் இவள் பதினெட்டு வயதிலும் கோழையாகவும் பிறரைச் சார்ந்து வாழும் பிறவியாகவும் கற்பிக்கப் படுகிறாள். இவர்களைச் சொல்லி குற்றமில்லை. இந்த சமூகத்தில் ஆணுக்கு ஒரு நியதியும் பெண்ணுக்கு ஒரு நியதியுமே வகுக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தத்தில் ஒரு ஆண் தனியாக நின்றால் அது ஒன்றும் அசாதாரணமாக காட்சி அல்ல. இயல்பாக அதைக் கடந்து அனைவராலும் செல்ல முடிகிறது. ஆனால் அதே ஒரு பெண் நின்றால் அவள் சந்திக்கும் பார்வைகளையும், எதிர்கொள்ள வேண்டிய வார்த்தைகளையும் வரிகளில் கொண்டு வர முடியாது. அவளின் சுழ்நிலைக்கான விளக்கங்களை இவர்களே உருவாக்குகிறார்கள்.

பொது இடங்களில் மட்டுமல்ல. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்று சொல்லும் பள்ளி கல்லூரிகளிலும் இதே நிலை தான்,
கல்லூரி பேருந்தில் மாணவர்கள் எவ்வலவு சத்தம் போட்டாலும் அமைதியாக வரும் பேராசிரியர்கள் மாணவிகள் சற்றே குரலை உயர்த்திப் பேசினால் கூட “பொமபளப் பிள்ளையா லட்சணமா இல்லாம இதென்ன இப்படி சத்தம் போடுறீங்க” - என்றே பெண்கள் லட்சணத்தை இவர்களே நிர்ணயம் செய்கிறார்கள்.

தெருவில் நின்று நான்கு ஆண்கள் பேசினால் பலருக்கும் அவர்களின் கல்லூரி காலம் மலரும் நினைவுகளாய் மனதில் மலரும். ஆனால் அதுவே நான்கு பெண்கள் கூடித் தெருவில் நின்றால் கூட “எங்க காலத்துலல்லாம் பொண்ணுங்க இப்படி இல்லப்பா” என்கிறார்கள். இப்போது ஏதோ நாங்கள் பிசாசுகள் ஆகிவிட்டது போல.

கண்ணுக்குத் தெரிந்த ஒரு எதிரியை போரிலே வீழ்த்தும் வீரனுக்கு பாடாண் திணை பாடும் இவர்கள் கண்ணுக்குத் தெரியாத ஆயிரம் எதிரிகளை தினம் தினம் வீழ்த்தும் பெண்ணுக்கு ஒரு திணையும் பாடாவிட்டாலும் வஞ்சப் புகழ்ச்சியாவது செய்யாமல் இருக்கலாம்

ஆண்க ள் தங்கியிருக்கும் ஒரு அறை குப்பைக் கூடை போல் இருந்தாலும் “பேச்சுலர்ஸ் ரூம்” என்று பெருமையாக குறை சொல்லும் சமூகம் பெண்கள் நால்வர் தங்கி இருக்கும் விடுதி அறையில் ஒரு காகிதம் குப்பைத் தொட்டியை விட்டு வெளியே வந்தால் கூட ”நாலு பொம்பளப் பிள்ளைங்க இருக்கீங்க, இதைக் கூட சுத்தமா வச்சுக்க மாட்டீங்களா நாளைக்கு எப்படித்தான் குடும்பம் நடத்தப்போறீங்களோ என்று குடும்பம் நடத்தவே பிறந்த ஜந்துகள் என்றே பெண்களை நிர்ணயித்து விட்டார்கள்.

 பெண்ணீயம் “ பேசும்” எத்தனையோ வீடிலும் பையனை கராத்தே வகுப்பிற்கும் பெண்ணை பரத நாட்டிய வகுப்பிற்கும் அனுப்பும் விந்தை அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.
ஆண்களின் நக்கல்கள் “ஹூயுமர் சென்ஸ்’ என்றும் அதுவே பெண்பாலில் துடுக்குத் தனம் என்றும் திருநாமம் சூட்டப்படுகிறது

பெண் முன்னேற்றம், பெண் விடுதலை என்று வாய் ஓயாமல் பேசும் பலரும் எட்டாம் வகுப்பு முடித்ததும் பெண் குழந்தைகளுக்கு சமையல் பயிற்சி ஆரம்பித்து விடுகின்றனர். 21 வயதில் திருமணம் முடித்து அடுப்படியில் வேக ஆரம்பித்த பெண்ணை இறந்த பின் நெருப்பில் வேக வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. அவள் ஏற்கனவே வெந்து தணிந்திருப்பாள். சமையல் நெருப்பால் மட்டுமல்ல. வார்த்தை நெருப்புகளாலும்,

நக்கண்ணை என்னும் பெண்பாற் புலவெ தம் கவிதையில் ஒரு மன்னனின் வெற்றியைப் பாடி வாழ்த்தி இருக்க அதுவே அவன் மீது கொண்ட காதலால் தான் பாடப்பட்டது என்றே புனையப்படுகிரது

இதே போல் தான் பாபரை முன்னிறுத்தி அவர் அத்தை செய்த ஆட்சியை வரலாறு பாவாடை ஆட்சி என்றே வர்ணிக்கிறது. ஆனால் நாங்கள் பீனிக்ஸ் பறவைகள் . ஆயிரம் அல்ல . நூறாயிரம் முறை எரித்தாலும் மீண்டும் எழுந்து வருவோம்.

ஆண்களும் ஆணாதிக்கமும் நிறைந்த சமூகத்திற்கு ஒரு சிறிய வேண்டுகோள். இனி நதிகளுக்கு பெண்ணின் பெயர் வைக்காதீர்கள். இனி நீங்கள் தூக்கி வீசும் குப்பைகளையும் உங்கள் அசுத்ததையும் நாங்கள் சுமந்து கொண்டிருக்க மாட்டோம். பெரும் கடலாய் பேரலைகளோடு உங்கள் வெற்றிகளால் இவ்வுலகை ஆக்கிரமிப்போம்.

 ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். பெண்களால் மட்டுமே அன்பில் அன்னை தெரசாவாகவும், கம்பீரத்தில் ஜான்ஸி ராணியாகவும் திகழ முடியும்.

இனி ஒவ்வொரு பெண்ணும் மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற வரிகளுள் உள்ள உண்மையை உணர வேண்டும். நாங்கள் பெண்கள். வானம் பார்த்த பூமியாக அல்ல. வானத்தை ஆக்கிரமிக்கும் நட்சத்திரங்களாக ஒளிர்வோம். உலகுக்கே வழிகாட்டுவோம்                                      


                                                   
*********************************************************************************