Sunday 28 December 2014

காக்கா...பாவம்

நீர்நிலைகளில் இருக்க வேண்டியா காகங்கள்...பாவம் வாட்டர் டேங்க் ம் நீர் நிலைனு நினைச்சிகிச்சி போல






வானம்

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வானம்.......

மார்கழி பனி மழையில் நனையும் சூரியன்






”நான் ஈ” இல்லை.

கொல்லைப்பக்கம் உலாவிய ஈ...


                     



                          

என்னா ஒரு வில்லத்தனம்???

இந்த நாயைப் பாத்திங்களா? முதல் படத்தில் நாய் வாளியை தன் காதால் தட்டி விடுகிறது. இரண்டாவது படத்தில் பாத்திரத்தில் உள்ள உணவுப் பொருளை அழகாக சாப்பிடுகிறது. ( நாய் சாப்பிட வந்தால் விரட்டாமல் சாப்பிடுவதை போட்டா புடிச்சியாடினு அம்மா திட்டியது ஆஃப் த ரெக்கார்ட்)










நம்பிக்கை

சிமெண்ட் தரையில் , தண்ணி இல்லாத இடத்தில், எப்படி தன் வாழ்வைத்துவக்குகிறது இந்தப் புல்..

கற்றுக் கொடுக்கிறது இயற்கை...எங்கும் நமக்கான தகவமைப்பை பெற்றுக் கொள்ள.







Saturday 13 December 2014

கால் முளைத்த கேரட்

சில சமயம் வீட்டுல் பொருட்களை அங்கங்கே போட்டுருவோம். அப்பல்லாம் அம்மா இது எப்படி இங்க வந்ததுன்னு கேப்பாங்க. அது ஏற்கனவே வந்ததுன்னோ அது பற்றி தெரியாதுன்னும் சொல்லி சமாளிப்போம்
உடனே அம்மா ஆமா அதுக்கு கை முளைச்சு கால் முளைச்சு வந்துச்சாடினு திட்டிட்டே எடுத்து வைப்பாங்க.
இப்ப பாருங்க நிஜமாவே கேரட்டுக்கு கால் முளைச்சுருக்கு....
இதனால் நான் அம்மாவுக்கு சொல்ல விரும்புவது...பொருட்களுக்கு கை கால் கல் முளைக்கும். எனவே வீடு கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால் அதற்கு நாங்கள்...குறிப்பாக நான் பொறுப்பில்லை...ஒ.கே..
நீங்க கூட இப்படி ஏதும் புதிதாய் சிந்திக்க முயலலாம்.
(அம்மா வாங்கி வந்த காய்கள் மூலமா...அம்மாவுக்கே ஆப்பு....ஹா....ஹா.....)






Friday 12 December 2014

பள்ளி முதல்வர்.2

அன்று பாதி தான் தட்டச்சு செய்ய முடிந்தது. மீதி இதோ
**************************************************************

அம்மா தலைமைஆசிரியர் என்பதால் அம்மாவின் தோழமைகைள் பெரும்பாலனவர்கள் தலைமை ஆசிரியர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் தனது உதவி ஆசிரியர்கள் பற்றிய ஒரு நீண்ட குற்றப்பட்டியல்களை வாசித்துக் கொண்டே இருக்கக் கேட்டிருக்கிறேன். மேலும் தனது கீழ்பணிபுரியும் ஆசிரியர்களைத் தட்டிக் கேட்க இயலாதவர்களாகவும், எதிர்க்கத் துணியாதவர்களாகவும் அதே சமயம் அவர்களோடு இணங்கிப்போகத் தெரியாதவர்களாகவும் இருப்பதை நான் அறிவேன். ஆனால் எங்கள் பள்ளி முதல்வரிடம் அந்தப் பேச்சுக்கே இடமில்லை.

எனக்கே ஒரு ஆச்சரியம் உண்டு. ஒரே நபர் எப்படி நெகிழ்வானவராகவும் கண்டிப்பு மிகுந்தவராகவும் இருக்க முடியும்? சூழலுக்கு தகுந்தார்போல் இயங்கும், அல்லது இயக்க வைக்கும் சூட்சுமத்தை அவர் யாரிடம் கற்றிருப்பார்?

எல்லாப் பிறந்தநாளிலும் அவர் தன் வலது கரத்தை என் தலையில் வைத்து காட் பிளஸ் யூ மை சைல்ட் என்று சொல்லி இனிப்புகள் எடுத்துக் கொண்டு ஒரு வாழ்த்து அட்டையில் கையெழுத்திட்டுத் தருவார். அவரிடம் அப்படி ஒரு வாழ்த்து பெறவே வருடத்திற்கு இரண்டு பிறந்த நாள்கள் வரக் கூடாதா என்ற எண்ணம் ஏற்படும் . அவரின் வாழ்த்து அவர் இதயத்திலிருந்து கிளம்பி நமது ஆன்மாவை நிறைக்கும். உண்மையான அன்பும் நேசமும் இருப்பவர்களால் தான் அப்படி ஒரு வாழ்த்து தர முடியும்

சென்ற பிறந்த நாள் அன்று அந்தப் பள்ளியில் நான் இல்லாத காரணத்தால் அவரின் வாழ்த்து கிடைக்காமல் போனது குறித்து இப்போதும் வருத்தமாகத்தான் இருக்கிறது.

அவரிடம் நல்லபெயர் மற்றும் நன்மதிப்பு வாங்கிய மாணவிகளில் நானும் ஒருத்தி.

ஏனோ எனது இப்போதையப் பள்ளியில் சில மாணவர்களின் அடாவடித்தனங்கள், மற்றும் அதனால் ஆசிரியர்கள் அடையும் மன உளைச்சல்களைப் பார்க்கும் போதெல்லாம் அவரிடம் இது போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

எப்போதும் மாணவர்கள் ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், காதலிப்பதும், பிற மாணவிகளை துயரத்திற்குள்ளாக்கும் போதும் எனக்கு இந்த துன்பங்கள் நேரவில்லை என்பதாலேயே என்னால் அகன்று போக முடியவில்லை. மனம் பரிதவிக்கிறது. சிறுமியான என்னால் என்ன செய்ய இயலும்? அவர்களுக்கான ஒரு பிரார்த்தனை செய்வதைத்தவிர. எல்லோரும் நல்லபடி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

கட்டணம் முறையாகக் கட்டாதவர்க்ள், சமுதாயத்தில் வளம் குன்றியவர்கள், மோசமான சூழ்நிலையிலிருந்து வருபவர்கள், மிக மோசமாக நடந்து கொள்ளக் கூடியவர்கள்,  என்று அங்கு இருந்த மாணவர்களில் பலவகை இருந்தார்கள் தான். ஆனால் எல்லோரையும் கவரக்கூடியதாகவும் அனுசரித்துப் போகக் கூடியதாகவும், ஆற்றுப் படுத்தக் கூடியதாகவும் இருந்தது அவரின் செயல்பாடுகள்.

 மிக உயர்ந்த நிலைக்கு வந்தபின் இந்த வலைதளம் பற்றியும் அவரைப்பற்றிய இந்த எனது எண்ணங்கள் பற்றியும் அவரோடு பகிர்ந்து கொள்வேன். ஒரு நல்ல மாணவி தன் செயல்களால் தான் தன்னை நிரூபிக்க வேண்டுமே தவிர  சொற்களால் அல்ல என்பதை உணர்கிறேன்.



இந்த வலை தளம் பற்றி அவருக்குத் தெரியாது. அவரைப் பற்றி எழுதப் போகிறேன் என்பதும் அவருக்குத் தெரியாது. ஆனால் இனிவரும் நாளில் நான் சமுதாயத்தில் மிக உயர்ந்த பதவியை அடையலாம். அப்படி நான் எதிலேனும் ஒரு நிலையில் உச்சத்தை அடைந்தவள் ஆவேன் என்பதுதான் அவருக்கு நான் தரும் பரிசு....காணிக்கை.








                                                                

( இன்னும் நிறைய சொல்லலாம் தான்...ஆனால்.. நேரம்) 

Tuesday 9 December 2014

பள்ளி முதல்வர்

                                           

நான் எனது பழைய பள்ளியை இன்னும் நேசிக்கிறேன். ஏனெனில் அதற்கு காரணம் எனது பள்ளி முதல்வர்.

நான் எட்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு எழுதி முடித்த போது என்னை அழ வைக்கும் ஒரு தகவல் வந்தது. எனது பள்ளி முதல்வர்  மஞ்சள் காமாலையின் காரணமாக இறந்து விட்டார்.

ஒரு புறம் பயம்...அச்சம்....ஏமாற்றம்.....வருத்தம் எல்லாம் கலந்த கலவையான உணர்வுக்குள் நான் தள்ளப்பட்டேன்.

ஏனெனில் அவர் ஒரு அன்புபெட்டகம்.மாணவர்களைக் கையாள்வதில் நிபுணர். ஆனால் எப்படியும் ஒரு புதிய முதல்வர் எங்களுக்கு வருவார். அவர் இவர் போல இருப்பார் என்று சொல்ல முடியாது.

எனவே புதியவர் குறித்த என் பயம் அதிகமானது. ஓரிரு நாளில் புதிய முதல்வர் வரப் போகிறார் என்றும் அவர் எப்போதும் குச்சியும் (பிரம்பு) கையுமாகத்தான் அலைவார் என்றும் தேவைக்கு அடிப்பதைத் தவிர தேவையில்லாமலும் அடிக்கடி அடிப்பார் என்றும் அனைத்து ஆசிரியர்களும் பயம் காட்ட ஆரம்பித்தனர். சும்மாவே நடுங்கிக் கொண்டிருந்த என் போன்றவர்களுக்கு மேலும் உதறல் எடுத்தது.

எனது தோழிகளும் விடாமல் புதிய முதல்வர் அப்படியாம், இப்படியாம் என்று தாங்கள் கேட்ட கதைகளையும் சில சமயம் கேட்காமல் தாங்களே உருவாக்கிய கதைகளையும் கூறிக் கொண்டே இருந்தனர்.

நான் பயந்து கொண்டே தான் ஒன்பதாம் வகுப்பிற்குள் நுழைந்தேன்.

முதல் நாள் அவரைப் பார்த்தபோது கொஞ்சம் மிடுக்கு, கம்பீரம் என்று தமிழில் ஏதேதோ சொல்வார்களே அப்படித்தான் தோன்றினார். ஆனாலும் பயமும் இருந்தது.

ஆனால் அவர்எங்கள் வகுப்பிற்கு முதன்முதலாய் வந்த போது ஆசிரியர் சொன்னது கட்டுக் கதைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று என் மனம் சொன்னது. ஆனாலும் எங்களை அச்சுறுத்தும் பணியை ஆசிரியர்கள் விடவே இல்லை.

அவர் பெயரில் உள்ள அருளை அவர் எப்போதும் தனக்குள் வைத்திருந்தார்.

இன்றைய நாளில் எங்கேனும் மாணவர்களைக் கையாளத் தெரியாத தனக்குக் கீழ் உள்ள ஆசிரியர்க்ளைக் கையாளத் தெரியாமல் யாரேனும் இருந்தால் எனக்கு சட்டென்று அவர் ஞாபகம் தான் வரும். அந்த அளவுக்கு எங்கள் மீது அன்பும், நட்பும், நேயமும், கொண்டவர். இன்னும் நான் சிறு பிள்ளையாக இருப்பதால் அவரைப் பற்றி வர்ணிக்க எனக்குத் தெரியவில்லை என்றே எண்ணுகிறேன்.

எல்லாப் பள்ளிகளிலும்  மாணவர்கள் மாணவிகளைக் கலாய்ப்பது  தவிர்க்க இயலாத்து தான். ஆனால் அவர்களை இவர் ஆற்றுப் படுத்திய விதமும் கையாண்ட விதமும் இன்னும் நான் வேறு பள்ளியில் படிக்கிறேன் என்றாலும் மறக்க முடியவில்லை. எப்போதும் பெண் பிள்ளைகள்ஒரு சில ஆண்பிள்ளைகளால் துயரத்திற்குள் தள்ளப் படுகிறார்கள் தான். ஆனால் அவர் அதனை மிகச் சரியாக கண்டுபிடித்து தண்டிப்பார். அல்லது கண்டிப்பார். அந்தப் பள்ளியில் நான் படித்த வரை ஆண் பிள்ளைகள் இந்த அளவுக்கு தொல்லை கொடுப்பதில்லை. அது எங்கள் முதல்வரின் கண்ணுக்கு எப்படித்தான் தெரியுமோ....அவர்களைக் கூப்பிட்டு அற்புதமாக கவுன்சிலிங் செய்து அனுப்புவார். அவர் பாணியை எல்லோரும் கையாண்டால் பள்ளியில் பெண் குழந்தைகள் மனப் புழுக்கம் கொஞ்சமேனும் குறையும் என்று தோன்றுகிறது.

அவர் பற்றி ஒரு முக்கிய நிகழ்வை நான் உங்களுக்குச் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.........தேர்வு காலமாகையால் எனக்கு நானே கணிணி கொடுக்கப்பட்ட நேரம் முடிந்தது...எனவே தொடரும்...

பின் குறிப்பு....இறந்து போன பள்ளி முதல்வர். திரு ஆரோக்கியசாமி

எங்களின் இனிய பள்ளி முதல்வர். திரு  அருள் பிரான்சிஸ்

எனது பழைய பள்ளி எஸ்.எஃப்எஸ்






Tuesday 2 December 2014

டமில் .in...இங்கிலிஷ்

                                  


தலைப்பே புரிய வைத்திருக்கும் இது எதைப் பற்றிய கட்டுரை என்று

இன்றைய மாணவர்கள் தமிழ் மீது அதிக ஆர்வம் காட்டுவதில்லை.  அவர்கள்  சொல்லும் காரணம் படிப்பிற்கு அது எந்த வகையிலும் உதவாது என்பதே.

போதாக்குறைக்கு இந்த தமிழ் வாத்தி எப்படி எழுதினாலும் முழு மதிப்பெண் போட மாட்டார் என்று ஆசிரியரையே குறை சொல்கின்றனர். தமிழ் ஆசிரியர்கள் அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இவர்கள் கணக்கில்   “அது” தான்

எதிலுமே தேர்ச்சி பெறாமல், அல்லது எதற்குமே லாயக்கற்றவர்கள் தான் தமிழ் படிக்க வேண்டும் என்பதுவே இவர்களின் எண்ணமாக இருப்பது தான் வேதனையிலும் வேதனை.

சரி படிக்கத்தான் மாட்டேன் என்கின்றார்கள் என்று பார்த்தால் பேச்சும்   “ தத்தக்கா பித்தக்கா”   என்று பேசி தமிழை கொல்கின்றனர்.

உணவு இடைவேளையின் போதும் ஆங்கிலம் கலந்து தான் பேசுகிறார்கள்        ( அதையேனும் முழுமையாய் பேசினால் தேவலை. அதுவும் அரை குறைதான்)

சாதாரண தமிழ் வார்த்தைகளான........கலப்படம், கலந்துரையாடல், இந்த வார்த்தைகள் கூடத் தெரியவில்லை. ஸ்கூல் வெறிச்சோடிக் கிடக்கு என்று சொன்னேன். இந்த வாக்கியம் அவர்களுக்குப் புரியவில்லை. புலவர் மகளே என்று என்னைக் கிண்டல் செய்கிறார்கள்.

தமிழ் அதிகம் தெரிந்து வைத்திருந்தால் அது ஒரு இழுக்கு என்றும் ..அவமானம் என்றும் கருதும் இவர்களை என்ன செய்வது?

சாதாரண சொற்களைக் கூட வித்தியாசமாகக் கேட்கிறார்கள். தமிழ் ஆசிரியர் வகுப்புக்கு வந்தால் அய்யோ ய்யோ தமிழா? என்று சொல்லி பிளேடு என்றும் போர் என்றும் தலையில் கைவைத்துக் கொண்டு அமர்கின்றனர். ஒருவருக்குக் கூட அது நம் தாய்மொழி என்ற பற்றே இல்லை.

இதுவாவது பரவாயில்லை. தமிழ்த் தாய் வாழ்த்து எழுதியது பாரதியார் என்று என்னோடு வாதிடுகிறார்கள். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்றும் பாதி பாடல் தான் அவர்கள் பாடுகிறார்கள் முழுப்பாடலும் கேட்க அழகாகவும் உணர்வுப் பூர்வமாகவும் இருக்கும் என்றால் ஏதோ நான் கதை சொல்வது போல் கேட்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு தமிழ் ஒன்றுமே அவர்களுக்கு ஞாபகத்தில் இல்லை. இதெல்லாமா நடத்தினார்கள் என்ற பாவனையில் பார்க்கிறார்கள். அதோடு இதனை நான் ஞாபகம் வைத்துள்ளதால் என்னை ஒரு விநோத ஜந்து போலவே பார்க்கிறார்கள்.

பாரதியார், ஒளவையார், கம்பர் தவிர ஒருவரையும் தெரியவில்லை. சுரதா, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாரதிதாசன், கண்ணதாசன், அழ.வள்ளியப்பா, முடியரசன், காசிஆனந்தன் , என்று ஒருவரையும் தெரியவில்லை.

இதுவே தெரியவில்லை என்றால் நான் நக்கன்னை, நச்செள்ளை, காக்கைப் பாடினி என்று சொல்லியிருந்தால் என்ன தெரிந்திருக்கும்?

திரையிசைப் பாடல்கள் கேட்கிறீர்களே அதுவும் ஏதேனும் ஒரு கவிஞரால் எழுதப்பட்டுப் பின்பு இசைக்கப் படுவது தானே என்றால் ஏதோ நான் வேற்று கிரகத்தில் இருந்து வந்து இவர்களுக்குச் சொல்வது போலவே தான் பார்க்கப்படுகிறேன்.

சரிதான். ஆங்கில வழிக் கல்வி வேலை தேடுவதற்காக என்றாலும் தமிழை வீட்டில் கேட்க மாட்டார்களாஎன்றால் கல்லூரியிலும் தமிழ் ஒரு வருடம் அல்லது இரு வருடம் தான் வரும் அது மதிப்பெண்ணாக கணக்கெடுப்பது இல்லை எனவே இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் மட்டும் கவனம் வைத்துப் படித்தால் போதும் என்று வீட்டிலேயே சொல்வார்களாம் ( காசி ஆனந்தன் அய்யா சரியாகத் தான் பாடியிருக்கிறார்....இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை என்றாரே தமிழே வேண்டாம் என்போரை என்ன சொல்வார்?   )  

இன்னொன்று இவர்களுக்கு இயற்பியல் வேதியியல் என்றால் சிரிப்பு வருது.

தமிழ் மதிப்பெண் தான் அனைத்திற்கும் செல்லுபடியாகும் என்ற சட்டம் இருந்தால் தமிழ் நாட்டில் இருந்து கொண்டே பிரஞ்ச், சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு போன்ற பாடங்களை மொழிப்பாடமாக ஏன் தேர்வு செய்கிறார்கள்.?

இதனை நான் சொன்னால் அதான் அதையெல்லாம் படிக்க தமிழ்மீடியம் பிள்ளைங்க இருக்காங்களே என்று சொல்லி , சொல்லும் என்னையும் கேலி பொருளாய் தான் எண்ணுகிறார்கள்

சில நாட்களுக்கு முன் நான்ஒரு வலைபக்கத்தில்  படித்தேன்  “டிஸ்கவரி சேனல்ல  கூட தமிழ் பேசுறாங்க.  ஆனா நம்ம தமிழில் பேசுனா டிஸ்கவரி சேனல் ஆர்ட்டிஸ்ட் மாதிரி பாக்குறாங்கன்னு.”

என்னே தமிழுக்கு வந்த சோதனை????????